சி.தில்லைநாதன் (மூலம்), கௌ.சித்தாந்தன் (தொகுப்பாசிரியர்). சுன்னாகம்: நூலக மன்றம், யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 2022. (அளவெட்டி: நியூ பாரதி பிரிண்டர்ஸ்).
xii, 87 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 978-624-6245-00-9.
இந்நூலில் பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களின் 13 கவிதைகளும் (இன்பத் தமிழ், பாட்டு வேணுமா?, வருத்தம் மறந்திட, கனவாய்ப் போனதே, மலரும் வண்டும், எங்கள் கதை, என் நினைவு, நிலவைப் பிடித்திடுவேன், அறிவெமக்குத் தந்தவையோ, பொங்கும் கவிதை பொலிந்து, உள்ளங்கள் விரியட்டும், வித்தகர் விபுலானந்தர், மானிடத்துக்கு மாவிட்டபுரத்தின் சவால்), இரு சிறுகதைகளும் (மனப்புண், வாழ்க்கைச் சூழலிலே), ஒரு கதையும் (நடமாடும் கதை), மூன்று கட்டுரைகளும் (அறிவினை வளர்த்த ஆசான், ஸ்கந்தவரோதயா எங்கள் கல்லூரி, ஸ்கந்தா: பொற்கால நினைவுகள் சில) தொகுத்துத் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி நாகம்மா தம்பதிகளின் புதல்வரான பேராசிரியர் தில்லைநாதன் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் வாழ்நாட் பேராசிரியராவார். யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியைக் கற்றபின் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்று முதல் வகுப்பில் சித்திபெற்றவர். அங்கேயே தனது முதுகலைமாணிப் பட்டத்தினையும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.லிட். பட்டத்தையும் பெற்றவர். தினகரன், ஒப்சேர்வர் பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் சிலகாலம் பணியாற்றியபின் வித்தியோதய பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து அங்கே உதவி விரிவுரையாளராகிப் பின் விரிவுரையாளராகி, 1991 முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இலங்கை அரசின் “கலாகீர்த்தி” விருதினையும் “இலக்கியச் செம்மல்” பட்டத்தையும் பெற்றவர்.