எஸ்.எஸ்.ஜெரேமையா (S.S.Jeremiah). தெல்லிப்பழை: ஏரெமியா சின்னத்தம்பி, தலைமை ஆசிரியர், Training and Industrial School, 2வது பதிப்பு, 1889, 1வது பதிப்பு, 1876. (தெல்லிப்பழை: Training and Industrial School Press).
(8), 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் புவியியல் பாடத்தை பயிற்றுவிக்கும் போது ஊர்களினதும் நாடுகளினதும் பெயர்களை மாணவர்கள் நினைவில் வைத்திருக்கும் வகையில் செய்யுள் வடிவில் இயற்றப்பட்ட நூல் இது. இலங்கையில் புவியியல் அல்லது பூமிசாஸ்திரம் எனப் பின்னாளில் அறியப்பட்ட “பூகோள தர்ப்பணம்” பயிலும் மாணவர்களுக்கென இலங்கையில் வெளியான இத்துறையிலான முதலாவது தமிழ் நூல் என அறியப்பட்டுள்ளது. பூகோளத்தைச் சிற்றுருவாக்கிச் சமீபத்தில் கொண்டுவந்து காட்டும் ஒரு கண்ணாடியாக இந்நூல் பற்றி அந்நாளில் விதந்து கூறப்பட்டுள்ளதாக முகவுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலின் காப்புச் செய்யுள் பின்வருமாறு:
“பூகோள மீது பொருந்து மிடப் பெயர்கள்
வாகான சிந்தை வசப்படுத்தப் – பூகோள
தர்ப்பணத்தை நற்றமிழ்ச் செயுட்டொடுத் துரைத்திடற்குக்
கர்த்தனித்த பொற்பதமேகாப்பு.”
மாதிரிக்கொரு செய்யுளாக “வாவிகள்” பற்றிக் குறிப்பிடும் ஏழாவது செய்யுள்
“கட்டுக்கரைக்குளம் கந்தளாய் முல்லை கவின் பதுவில்
கிட்டுந்தனிக் கொக்கிளாயேரி மின்னெரி கீழ்மடுவாம்
மட்டக்களப்புடன் நீர்கொழும்பும் வெண்வனசமுகை
வட்டித்தெழுங் கொழும்போடு கண்டிக்குளம் வாவிகளே”.
என அமைந்துள்ளது.