குடும்பத்தினர். லண்டன் E7 8PQ: சுடரொளி வெளியீட்டுக் கழகம், 15, Rutland Road, 1வது பதிப்பு, ஜீன் 2022. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட், Hoe Street, London E17 4QR).
90 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×19 சமீ.
அமரர் ஐ.தி.சம்பந்தன் (26.06.1935- 03.04.2022) அவர்களின் நினைவாக அன்னாரின் அந்தியேட்டி நிகழ்வின்போது வெளியிடப்பட்ட நினைவு மலர். குடும்பத்தவர்களினதும் சமூகப் பிரமுகர்களினதும் அஞ்சலிக் கட்டுரைகளுடனும் வெளிவந்துள்ளது. ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல், தொழிற்சங்க வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் செல்லும் ஒரு ஆய்வாளனின் பார்வையில் ஐ.தி.சம்பந்தன் என்ற பெயர் இடைக்கிடையே சிக்கிக்கொள்ளும். தமிழரசுக் கட்சியின் அரசியல் களமாகட்டும், ஈழத்தமிழரின் தொழிற்சங்க போராட்டங்களாகட்டும், இனக் கலவரம் தொடர்பான சன்சோனி கமிஷன், மற்றும் இனப்பிரச்சினை தொடர்பான பல்வேறு ஆணைக் குழுக்களின் அறிக்கைகளாகட்டும், எரிந்துபோன யாழ்ப்பாணப் பொது நூலகத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் தொடக்கப்பட்ட கொடித்தினப் பணிகளாகட்டும், ஆறுமுக நாவலர் நினைவெழுச்சிப் பணிகளாகட்டும், அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. ”தமிழ் தந்த தாதாக்கள்” என்ற தலைப்பில் தமிழறிஞர் க.சி.குலரத்தினம் அவர்களது நூலொன்றை திரு சம்பந்தர் யாழ்ப்பாணத்திலிருந்தபோது, தனது சுடரொளி வெளியீட்டுக்கழக வெளியீடாக 1987இல் வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து க.சி.குலரத்தினம் அவர்களின் மற்றொரு நூலான “செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்” என்ற நூலின் முதலாம் பாகத்தை 1989இல் வெளியிட்டுவைத்தார். ”தமிழ் அகதிகளின் சோக வரலாறு” என்ற நூலை ஜீன் 1996இல் வெளியிட்டிருந்தார். மறைந்த தலைவர் சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களின் வாழ்வும் பணியும் பற்றிய பல்வேறு அரசியல் ஆர்வலர்களின் மலரும் நினைவுகளைத் தொகுத்து ”ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா” என்ற தலைப்பில் ஒரு நூலை, ஜேர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் வெ.செ.குணரத்தினம் அவர்களின் உதவியுடன் 2004இல் வெளியிட்டிருந்தார். ‘புதுயுகத் தமிழர்” என்ற தலைப்பில் உலகத்தமிழர்களிடையே கவிதைப் போட்டி ஒன்றை மில்லெனியம் ஆண்டையொட்டி நடத்தியதுடன் அதற்காகப் பெறப்பட்ட கவிதைகளின் தேர்ந்த தொகுப்பாக ”புதுயுகத் தமிழர்” என்ற கவிதைத் தொகுப்பினை திரு. பொன் பாலசுந்தரம் அவர்களின் துணையுடன் 2005இல் வெளியிட்டிருந்தார். இலங்கைத் தமிழ் அரசியல்வாதி தி.மகேஸ்வரன் அவர்களின் அரசியல் சமூக வாழ்வை வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சியில், தான் முன்னர் பிரத்தியேக செயலாளராகச் சிலகாலம் அவருடன் பணியாற்றிய நினைவுகளை அடியொற்றி ஒரு ஆவண நூலாக ”மகேஸ்வரன்- அரசியல்வாழ்வும் தமிழர் பிரச்சிரனயும்” என்ற பெயரில் வெளியிட்டு அமரர் மகேஸ்வரனின் அறியப்படாத சில பக்கங்களை 2008இல் ஆவணமாக்கியிருந்தார். ‘கறுப்பு யூலை ’83: குற்றச்சாட்டு: கறுப்பு யூலை 83 நினைவுகள் வரலாற்றுப் பதிவுகள்” என்ற தலைப்பில் 2009இல் ஒரு பாரிய தொகுப்பினை பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களின் உதவியுடன் உருவாக்கி வழங்கியிருந்தார். 2011இல் ‘சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி வாழ்வியற் பணிகள்” என்ற நூலையும் வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணத்திலும் பின்னர் லண்டனிலும் ”சுடரொளி” என்ற சஞ்சிகையை நீண்டகாலம் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரது நூல்வெளியீட்டுப் பணியும் ஆவணவாக்கல் பணியும் குறிப்பிடத் தகுந்தது.