யோ.யோண்சன் ராஜ்குமார் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேக்மன் ஜெயராசா குடும்பத்தினர், கொழும்புத்துறை, 1வது பதிப்பு, மே 2022. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).
vi, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
பேக்மன் ஜெயராசா (21.10.1945- 28.5. 2021) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது மறைவின் ஓராண்டு நிறைவில் அவபை;பற்றிய மனப்பதிவுகளுடன் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டுக்கூத்து நாடகங்கள் மற்றும் இசை நாடகங்கள் பலவற்றில் இவர் நடித்துள்ளார். பல நாட்டுக்கூத்துக்கள் பழக்கியுள்ளார். தன் குரல் வளத்திற்காக மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவர். யாழ்ப்பாணம் பறங்கித் தெருவில் 21.10.1945-ல் ஜெயராசா அருளப்புவின் மகனாகப் பிறந்தார். 1975-லிருந்து கொழும்புத்துறையில் வசித்துவந்தார். கொழும்புத்துறை புனித ஜோசப் பாடசாலையில் கல்வி கற்றார். தொலைத்தொடர்பு திணைக்களத்தில் (Telecommunication Department) பணி புரிந்தார். பெரிய தகப்பனார் நாவாந்துறையைச் சேர்ந்த மரிசலினும் சிறிய தந்தை சூசை மரியானும் அண்ணாவியார்களாவர். ஜெயராசா எட்டாம் வகுப்பில் யுவானியார் நாடகத்தில் “ஏரோலியான்” என்ற பாத்திரத்தில் முதன்முதலில் நடித்தார். இவரின் குரல்வளத்திற்காக நாட்டுக்கூத்து மன்னன் பூந்தான் யோசேப் தனது நாடகங்களில் சேர்த்துக் கொண்டார். தொடர்ந்து “சகுந்தலை”, “ஏரோதன்” போன்ற பல நாட்டுக்கூத்து இசை நாடகங்களில் இவர் நடித்தார். நாவாந்துறை, பாசையூர், கொய்யாத்தோட்டம், குருநகர், ஊர்காவற்றுறை, கரம்பன், சில்லாலை, இளவாலை, மயிலிட்டி, ஊரணி, அச்சுவேலி, தாளையடி, கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதேசங்களில் இவர் நடித்த நாடகங்கள் பலவும் மேடையேற்றப்பட்டன. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றும் பேக்மன் ஜெயராசா நடித்தார்.