ந.சி.கந்தையாபிள்ளை. சென்னை-1: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 1வது பதிப்பு, மார்ச் 1948. (மெட்ராஸ்: Progressive Printers).
(4), 44 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.
அகத்தியரின் வரலாற்றைக் குறித்துப் பலரும் ஆராய்ந்துள்ளனர். சிலர் அகத்தியர் தமிழ்நாட்டில் இருந்தவரல்ல எனக் கூறினர். சிலர் அவர் வட நாட்டினின்றும் வந்து தென்னாட்டை ஆரியமயமாக்கியவர் எனக் கூறினர். வேறு சிலர் வேறு பலவாறு கூறினர். அவற்றை ஆராய்ந்து, புராணக்கதைகளை விரித்தாராயாது, தனக்கு அறிவுபூர்வமானதாகத் தோன்றிய கருத்துக்களை இந்நூலில் விபரித்துள்ளார். முன்னுரை, தோற்றுவாய் ஆகியவற்றுடன் இந்நூலில் அகத்தியர், கம்போதியாவில் அகத்தியர், மலாய தீவுகளில் அகத்தியர், அகத்தியர் பலர், சிற்றகத்தியமும் பேரகத்தியமும், சின்ன ஆசியாவில் அகத்தியர், பழைய தமிழ் நூல்களில் அகத்தியரைத் தமிழோடு தொடர்புபடுத்திக் கூறும் பகுதிகள் ஆகிய தனித்தனி இயல்களாக எழுதப்பட்டுள்ளன. பல்வேறு தமிழ், ஆங்கில நூல்களின் தகவல்களை சுவாரஸ்யமாகத் திரட்டித் தமிழில் எமக்களித்துள்ள ந.சி.கந்தையாபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் நவாலியைச் சேர்ந்தவர், மலேசியாவிலும் தமிழகத்திலும் நீண்டகாலம் பணியாற்றி தன் வாழ்வின் இறுதிக்காலத்தில் கந்தரோடையில் வாழ்ந்து மறைந்தவர். அறுபதிற்கும் அதிகமான நூல்களை தமிழில் எமக்களித்தவர்.