என்.செல்வராஜா. யாழ்ப்பாணம்: எங்கட புத்தகங்கள், 906/23, பருத்தித்துறை வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: மிக்கி பிரின்டிங் ஸ்பெஷலிஸ்ட், தபாற்பெட்டிச் சந்தி, பலாலி வீதி, திருநெல்வேலி).
x, 105 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-97823-3-4.
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் அமரர் க. குணராசா ஒரு பன்னூலாசிரியராவார். சமூக நாவல்கள், குறுநாவல்கள், வரலாற்று நாவல்கள், சிறுகதைகள், பல்துறைக் கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், புவியியல்சார் அறிவியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலில் செங்கை ஆழியானின் படைப்பிலக்கிய வாழ்வினை அவரது படைப்புகளின் மூலமாகத் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இவ்வாய்வுக் கையேட்டில் செங்கை ஆழியானின் படைப்புக்கள் ஆண்டுவாரியாக 1962 முதல் 2016 வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவரது நூல்களில் பல மீள்பதிப்புகளாக பின்னைய காலங்களில் வெளியிடப்பட்டிருந்த போதிலும் முதற் பதிப்பு வெளிவந்த ஆண்டின் கீழேயே அவையும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு படைப்பின் கீழும் அந்நூல் பற்றிய சிறு குறிப்பொன்றும் தரப்பட்டுள்ளது. இந்நூலில் பிரதான பதிவையடுத்து, அவரது நூல்களை வகைப்படுத்தும் முயற்சி ஒன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செங்கை ஆழியானின் நூல்கள் அனைத்தையும் நாவல்கள்/குறுநாவல்கள், வரலாற்று நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், பல்துறைக் கட்டுரை நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், திரைப்படப் பிரதிகள், அறிவியல் நூல்கள்: புவியியல், பொது அறிவு, பொது உளச்சார்பு, வரலாற்று நூல்கள், செங்கை ஆழியான் தொகுத்த நூல்கள், செங்கை ஆழியான் பற்றிய நூல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பிரிவில் நூல்களின் தலைப்புகள் அகரவரிசைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் வெளியிட்ட ஆண்டும் தரப்பட்டுள்ளது. அகர வரிசையில் ஒரு நூலை பிரதான பதிவின் கீழ் தேட முனையும் ஆய்வாளருக்கு இது உதவியாகவும், நேரத்தை மீதப்படுத்தவும் உதவும்.