கனகசபை உருத்திரகுமாரன். யாழ்ப்பாணம்: உருத்திரகுமாரன் கௌரிசங்கர், 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ.
வடபுலத்து சப்ததீவுகளில் ஒன்றான நயினாதீவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெரும்புகழுடன் வாழ்ந்தவர் நாகமணிப் புலவர் (10.12.1880-20.07.1933). இவர் தனது ஐந்தாவது வயதில் நயினை வீரகத்திப்பிள்ளை ஆசிரியரால் நடத்தப்பட்ட திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வியை பெற்றுக்கொண்டார். அக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தில்லையம்பல வித்தியாசாலை என்ற சைவப் பாடசாலையில் இணைந்து சோமசுந்தர ஐயரிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். வளர்ந்ததும் யாழ்ப்பாணத்தில் சில வணிகர்களுக்கு கணக்கெழுதும் தொழிலை செய்து வந்தார். பின்னர் அத்தொழிலை விடுத்து தமது பிறந்த ஊரான நயினாதீவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கிராமச் சங்கத் தலைவராக பணியாற்றியுமுள்ளார். இவர் படைத்த நயினை மான்மியம், நயினை நீரோட்ட யமகவந்தாதி, வழிநடைச் சிந்து ஆகிய ஆக்கங்கள் இதுவரை நூலுருவில் வெளிவந்துள்ள போதிலும் எராளமான படைப்புக்கள் இவரது வாழ்நாட்காலத்தில் அச்சுவாகன மேறவில்லை. புலவரவர்களின் வாழ்வின் பெரும்பகுதியை கவிதை புனைவதில் செலவிட்டார். யமகம், அந்தாதி, மான்மியம், சிலேடை, வெண்பா என்பவற்றில் இவரது புலமை மிக ஆழமானது. வரகவி நயினை நாகமணிப் புலவரவர்களின் படைப்பாற்றல் பற்றி இந்நூல் விரிவாகக் கூறுகின்றது.