கா.தவபாலன் (இயற்பெயர்: காசிப்பிள்ளை தவபாலச்சந்திரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜீன் 2016. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xiv, 66 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43867-0-9.
மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ள இந்நூலின் ”இலங்கைவாழ் தமிழர்களின் வாழ்வியல்” என்ற முதலாவது பகுதியில், யாழ்ப்பாண மாவட்டம், மலையகம், கிழக்கு மாகாணம், வன்னியும் கிளிநொச்சியும், வன்னியின் பொருளாதாரம், வன்னியின் சமய நம்பிக்கைகள், வன்னியிற் கிராமிய வழிபாட்டு முறைகள், வன்னிப் பிரதேசக் கல்வி நிலை, வன்னிப் பிரதேசத்தின் நீர்வளம், வைத்திய வசதிகளும் வசதியீனங்களும், மன்னார் மாவட்டம் ஆகிய 11 அத்தியாயங்களில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வியலும் வரலாறும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ”இலங்கைவாழ் தமிழர் தொடர்பான அரசியல் நிகழ்வுகளின் சுருக்கம் 1948 தொடக்கம் இன்று வரை” என்ற இரண்டாவது பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுதலும் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாதலும், டட்லி-செல்வா ஒப்பந்தம், 1972அரசியல் யாப்பும் 1977இல் பொதுத் தேர்தலும், 1978 அரசியல் யாப்பு, 1987 இலங்கை இந்திய ஒப்பந்தமும் மாகாணசபை ஆட்சிமுறையும், திரு.விஜயதுங்க ஜனாதிபதியாதல், திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறல், 2005ம் ஆண்டில் திரு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி ஏற்றல், 2015இல் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு திரு. மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஜனாதிபதியாகவும் திரு றணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அமைச்சராகவும் பதவி ஏற்றல் ஆகிய 9 அத்தியாயங்களில் இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. ”வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளும் ஆட்சி முறைகளும்” என்ற மூன்றாவது பகுதியில் இந்தியா, அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு நாடுகளின் அரசியலமைப்புகளும் ஆட்சி முறைகளும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் 59ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.