16966 கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்: கட்டுரைத் தொகுப்பு.

த.ஜீவராஜ். திருக்கோணமலை: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, 2021. (திருக்கோணமலை: ஏ.ஆர்.டிரேடர்ஸ், 82, திருஞானசம்பந்தர் வீதி).

174 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-6135-10-2.

திருக்கோணமலை மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு காலப் பகுதிகளுக்குரிய 22 கல்வெட்டுகளின் வாசகங்களை உள்ளடக்கியிருக்கும் இந்நூல் “கொட்டியாரப்பற்று வன்னிபங்கள்” என்ற தலைப்புடன் ஆசிரியரின் முதலாவது நூலாக வெளிவந்துள்ளது. மிக நீண்ட பாரம்பரிய வரலாற்றைக் கொண்ட திருக்கோணமலையினை சிற்றரசர்களாக ஆட்சிசெய்த வன்னிபங்கள், திருக்கோணமலையில் நிலவிய சோழராட்சி தொடர்பான தகவல்கள் மற்றும் தேவரடியார்கள், அண்ணாவிமார்கள், திருக்கோணேச்சரம் போன்ற வரலாற்று அம்சங்கள் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளான கழனிமலைக் கல்வெட்டு, மூதூர் பட்டித்திடல் கல்வெட்டு என்பன பற்றியும் கந்தளாயில் கிடைத்த அபூர்வ துளை கொண்ட பானை பற்றியும் விபரிக்கின்ற கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்கியிருக்கிறது. திருஞான சம்பந்தரின் திருக்கோணேச்சர தேவாரப் பதிகம் தொடர்பான ஆய்வுடன் இந்நூல் நிறைவுபெறுகின்றது. இருமரபுந்துய்ய எதிர்வீரசிங்க நல்ல பூபால வன்னிபத்தின் உயில், கொட்டியாபுரத்து வன்னிபங்கள், திருக்கோணமலையில் சோழர், நங்கை சானியும் ஏழு தேவரடியார்களும், தம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல், கழனிமலைக் கல்வெட்டுகள், மூதூர் பட்டித்திடலில் நவீனயுகக் கல்லாவணங்கள், துளைகொண்ட அபூர்வ பானை கந்தளாயில் இலங்கைத் தமிழர் வரலாறு-கிழக்கிலங்கையில் நாகரும் தமிழும், கி.பி.1600 ஆண்டுகளில் திருக்கோணேச்சர ஆலய தரிசனம், திருஞானசம்பந்தரின் தமிழ் பக்தி இயக்கத்தில் திருக்கோணேச்சரம் ஆகிய 10 ஆக்கங்கள் வழியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்