ராதா மனோகர். மதுரை 625503: சிபி பதிப்பகம், 1E, வடக்குத் தெரு, ஆதனூர், முடிவார்பட்டி, 1வது பதிப்பு, 2023. (மதுரை: ஷான்லாக்ஸ் பிரின்டர்ஸ்).
80 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.
நூலில் பொருளடக்கப் பக்கம் இல்லை, எழுத்தாளர் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. ராதா மனோகர், நல்லூரை பிறப்பிடமாகக் கொண்டவரெனவும், கனடாவில் தற்போது வசித்துவருபவர் எனவும் பதிப்பாளர் உரையில் உய்த்துணர முடிகின்றது. ‘இலங்கை நல்லூர் கந்தசாமி கோவிலை பொதுக் கோவிலாக்க வேண்டும் என்று ஒரு வழக்கு விவரத்தையும், தீர்ப்பு விவரத்தையும் கொடுத்து, இதை ஆவணப்படுத்தவேண்டும் என்று கனடாவாழ் இலங்கைத் தமிழரான நண்பர் ராதா மனோகர் கேட்டுக்கொண்டார். எத்தனையோ கோவில் வழக்குகள் நடந்திருக்கின்றன. முடிவுறாமல் எத்தனையோ வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் சிதம்பரம் நடராஜர் கோவில் பிரச்சினையும்கூட இன்னும் முடிவுறாமல் இழுத்தடிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் நல்லூர் கந்தசாமி கோவில் வழக்கு நடைபெற்று முடிந்திருக்கிறது. அந்த வழக்கு விபரத்தை படித்தபோது, அந்த கோவிலின் வரலாறு என்ன என்று அறிந்துகொள்ள முயன்றேன்’ என்று தமிழகப் பதிப்பாளர் கூற்று காணப்படுகின்றது. ராதா மனோகரின் உறவினர்கள் நல்லூரில் வசித்துவருகிறார்கள் எனவும் அவர்களிடமே இந்த நூல் பிரதிகள் இருந்ததாகவும் தெரிகிறது. 1928 ஆகஸ்ட் 6 இல் இடம்பெற்ற நல்லூர் கோவில் தொடர்பான வழக்கு 5 அத்தியாயங்களாக இந்நூலில்; இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ‘திராவிடன்’ பத்திரிகையில் 23 ஜூன் 1929 ஆம் ஆண்டு வெளிவந்த வழக்கு, இந்த நூலில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மூலப்பதிவு ‘இந்துசாதனம்’ பத்திரிகையில் உள்ளதென்ற குறிப்புமுள்ளது. நூலின் 53ஆம் பக்கத்திலிருந்து, Nallur Kandaswamy Kovil Declared a Public Temple என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் 4 அத்தியாயங்களில் இந்த வழக்கு விபரம் கூறப்பட்டுள்ளது.