17260 துருவேறும் கைவிலங்கு: தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கட்டுரைகள்.

விவேகானந்தனூர் சதீஸ்;. கிளிநொச்சி: மகிழ் பதிப்பகம், 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2023. (யாழ்ப்பாணம்: ரீஜி பதிப்பகம்).

xviii, 235 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-99181-7-7.

சிறை வாழ்க்கை பற்றி இதுவரை வெளிவந்துள்ள அங்கீகரிக்கப்பட்ட இலக்கியங்களுக்கு எவ்விதத்திலும் சளைத்திருக்காத படைப்புக்களைத் தனது சொந்த அனுபவங்களின் வாயிலாகத் தந்துகொண்டிருக்கும் விவேகானந்தனூர் சதீஸ் தான் சிறைவாழ்வின்போது எழுதிய கட்டுரைகளை இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கின்றார். இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் அரசியற் கைதிகளின் ஆதங்கத்தை காலத்தின் கனதியில் மறைந்து நிற்கும் அவர்களின் குரலாகப் பதிவுசெய்துள்ளார். எளிமையின் ஆற்றோட்டத்தில் பயணித்து வெளியுலகம் தன் கண்களால் கண்டிராததும் சுவாசித்தறியாததுமான இடங்களையும் தகவல்களையும் கொண்டமைந்த இப்பதிவுகள் சமூகத்தின் கதைகளாகவும், வரலாற்று ஆய்வாளர்களின் கண்களில் ஆவணமாகவும் தென்படலாம். கிளிநொச்சி மாவட்டம் விவேகானந்தநகர் கிழக்கைச் சொந்த இடமாகக் கொண்டு கிளிநொச்சி அரச பொது மருத்துவமனையின் நோயாளர் காவுவண்டி ஓட்டுநராகப் பணியாற்றிய செல்லையா சதீஸ்குமார் 2008ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை தீர்ப்புக்கு உள்ளானவர். தனது 15 ஆண்டுக்கால சிறைவாழ்வின் கோரங்கள், கொடுமைகள், அச்சுறுத்தல்கள், அவமானங்கள், மனதை அழுத்தி அலைக்கழிக்கின்ற உள நெருக்கீட்டுத் துன்பங்கள் என்பவற்றை வாழ்வியல் அனுபவமாகக் கொண்டவர். இந்நூலில் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பான இவரது 36 கட்டுரைகளும், சிறையிலிருக்கும் கணவருக்கு, ஆசை மகளுக்கு அப்பாவின் மடல், அன்புள்ள அம்மாவுக்கு ஆகிய மூன்று சிறை மடல்களும், சிறை தின்ற உயிர் என்ற தலைப்பில் சிறையில் உயிரிழந்தோரின் விபரம் என்பனவும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்