எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ.
‘இந்த நூல் ஒரு கவிதை நூல். இவற்றை கவிதை என்று சொல்லமுடியாது. கவிதை மட்டுமல்ல புகைப்படங்களும் அடங்குகின்ற நூல். நான் அவ்வப்போது எடுக்கின்ற புகைப்படங்களைத் தொடர்ந்தே கவிதைகள் வருகின்றன. மொபைல் போன் வந்த பிறகு எந்நேரமும் கையில் கமராவும் இருக்கும் அல்லவா? இதனால் கமராவை கையில் கொண்டு அலையாமல் விரும்பிய நேரத்தில் எங்கும் எப்போதும் படம் ‘கிளிக்’ செய்ய முடிந்தது. மரம், செடி, கொடி, மலர்கள், வானம், கடற்கரை, மிருகங்கள் போன்ற பேசாமடந்தைகளே எனது கிளிக்குகளில் அடங்குவர். பேஸ் புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் இத்தகைய படங்களைத் தரவு ஏற்ற முற்பட்டேன். வெறுமனே படங்களைப் போட்டால் அவற்றை பலரும் அவதானிக்க மாட்டார்கள் என்ற காரணத்தால் அந்தப் புகைப்படங்களுக்கு ஏற்ற சில வரிகளையும் சேர்த்துக்கொண்டேன். அந்தந்தக் கால அரசியல் சமூகப் பிரச்சினைகளையே அவ்வரிகள் பெரும்பாலும் மூடுபொருளாகக் கொண்டிருக்கும். இந்த வரிகளையே நண்பர்கள் பலரும் கவிதை என எடுத்துக் கருத்துகள் கூற ஆரம்பித்தார்கள். இந்தப் புகைப்படங்களையும் கவி வரிகளையும் இணைத்தே இந்த நூல் வெளிவருகின்றது.’(ஆசிரியர்-என்னுரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 411ஆவது நூலாக வெளிவந்துள்ளது.