மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
154 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-13-9.
இந்நூலில் ‘கலைமாமணி’ மலரன்னையின் 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை ஒளி தரும் கரங்கள், மாற்று மோதிரம், தானம், பழியாரது, பவிசு, நெறி, கூர்முள், நிரையும் நிராசையும், பிரதி மார்க்கம், அமங்கலி, விழல் வேட்கை, மூச்சு, பச்சைக்கொடி, படிக்கற்கள், முளைவிடும் உணர்வுகள், பக்கங்கள் இரண்டு, இலைமறை காய், நிமிர்வு, பயன்தரு மாமரங்கள், சுயநிர்ணயம், கோடரிக்காம்பு ஆகிய தலைப்புகளில் முன்னர் பல்வேறு ஊடகங்களிலும் பிரசுரமானவை. மலரன்னை, ஈழத்தின் அறியப்பட்ட எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக்கல்வியை மலையகப் பாடசாலையொன்றில் கற்றார். இவரது பாடசாலை ஆசிரியையாக இவரது தாயாரும், பாடசாலையின் பொறுப்பாசிரியராக இவரது தந்தையாரும் (கச்சாயில் இரத்தினம்) பணியாற்றியிருந்தனர். ஆறாம் வகுப்புக் கல்வியை சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயத்திலும், பின் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை விஞ்ஞானப்பிரிவில் யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். தேசிய ஹோமியோபதி கல்வி நிறுவனத்தில் ஹோமியோபதி மருத்துவ பட்டயக் கல்வியை பூர்த்தி செய்த இவர், தனது கணவருடன் இணைந்து முல்லைத்தீவு தண்ணீரூற்றில் இயங்கிய நாகபூசணி தனியார் மருத்துவ நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றினார். பிற்காலங்களில் ஹோமியோபதி, சுதேச மருத்துவத்திற்காக பிரித்தானியாவில் இயங்கும் மாற்று மருத்துவத்திற்கான அமைப்பு ஒன்றில் அங்கத்தவராக உள்ளார். மலரன்னையின் சுமார் 150 க்கும் அதிகமான சிறுகதைகள் இதுவரை பிரசுரமாகியுள்ளன. நாற்பதுக்கும் அதிக வானொலி நாடகங்கள் ஒலிபரப்பாகியுள்ளதுடன், ‘கனவுகள் நனவாகும்’ என்ற 43 அங்கங்களையுடைய தொடர் நாடகமும் பலத்த வரவேற்புடன் ஒலிபரப்பாகியது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் தாயக வானொலியில் நிகழ்ச்சிகளாக ஒலிபரப்பாகியிருக்கின்றன. குறிப்பாக பல மாவீரர் நிகழ்ச்சிகளை தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இவரது பத்து ஆங்கிலக் கவிதைகள் வரை ‘Hot spring’ பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தன. இவரது ஆக்கங்கள் இதுவரை 32 தடவைகள் திறந்த இலக்கியப்போட்டிகளில் பரிசுபெற்றிருக்கின்றன.