அகரமுதல்வன். சென்னை 600 002: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை).
384 பக்கம்,விலை: இந்திய ரூபா 430., அளவு: 23.5×16.5 சமீ., ISBN: 978-93-94265-48-6.
அகரமுதல்வன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தொடராக எழுதிய கதையான ‘கடவுள் பிசாசு நிலம்’, 2021 செப்டம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை 70 பகுதிகளாக வெளியானது. பின்னர் 2023-ல் தொகுக்கப்பட்ட இதன் நூல் வடிவம் விகடன் பிரசுரமாக வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் இடையே ஏற்பட்ட சமாதான பேச்சுவார்த்தைக் காலத்தில் தொடங்கி இறுதிப் போர் தொடங்கும் வரையிலான காலகட்டம் தான் இந்தக் கதையின் களமாகும். போராளிகளின் வாழ்க்கையையும் அரசின் தந்திரங்களையும் ஒரு சிறுவனின் பார்வையில் கதையாக நகர்த்தப்படுகின்றது. அகரமுதல்வன் தமிழில் புனைவுகளும் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையிலும் பணியாற்றுபவர். இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம் பளை பிரதேசத்தில் பிறந்த இவர் யாழ்ப்பாணம் சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் தன் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, பின்னர் உள்ளக இடப்பெயர்வுகளால் கிளிநொச்சி, முல்லைத்தீவு என பல இடங்களில் தன் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தவர். பின்னாளில் தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்து அங்கு வாழ்ந்துவருகிறார். அகரமுதல்வனின் முதல் படைப்பு 2000-ல் பிரசுரமான கவிதையாகும். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக கவிஞர்களான காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, அம்புலி, கஸ்தூரி ஆகியோரையும், எழுத்தாளர்களான ஆதிலட்சுமி சிவகுமாரன், மலைமகள், மு.தளையசிங்கம், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரையும் குறிப்பிடுகிறார். ‘மூன்று தசாப்தகாலமாக நிகழ்ந்த ஈழத்தமிழரின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் கண்டிருக்கிற வீழ்ச்சியையடுத்து கட்டமைக்கப்படும் அனைத்து பொய்க் கதைகளையும் தகர்க்கவல்ல பேருண்மையை என்னுடைய கதைமாந்தர்கள் சுமக்கிறார்கள்’ எனத் தனது புனைவெழுத்தின் நோக்கத்தை குறிப்பிடுகிறார்.