கௌசி (இயற்பெயர்: சந்திரகௌரி சிவபாலன்). சென்னை 600 088: வசந்தா பதிப்பகம், 26, குறுக்குத்தெரு, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், 1வது பதிப்பு, 2024. (சென்னை 600 032: பத்மாவதி ஆப்செட்).
344 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-93-6415-601-1.
இந்நாவலின் ஆசிரியர், தான் மாணவியாகக் கல்வி கற்ற பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பின்புலத்தில்; இந்நாவலை கட்டமைத்திருக்கிறார். மட்டக்களப்பு மண்ணில் நிலவிவரும் பல பண்பாட்டுக் கூறுகளைக் கௌசியின் நூலில் காண முடிகின்றது. மட்டக்களப்பு மக்களின் விருந்தோம்பல், பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், பத்தியம் மற்றும் மருத்துவ முறைகள், அப்பிரதேசத்திற்குரிய பழமொழிகள், மட்டக்களப்புப் பிரதேசத்தில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டம், தமிழ் முஸ்லிம் கலவரங்கள், இடப்பெயர்வுகள், காவல்துறை-இராணுவ அத்துமீறல்கள், பல்கலைக்கழகங்களின் சாபக்கேடான பகிடிவதை எனப் பல்வேறு அம்சங்கள் இந்நாவலின் பாத்திரங்களினூடாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் ஏறாவூரில் பிறந்த சிநேகா உள்ளூரில் கற்று, பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு பட்டப்படிப்புக்காகச் செல்கிறார். பின்னர் நீர்கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெறுகின்றார். அங்கு அரவிந்தனுடன் அறிமுகமாகி அவரைத் திருமணம் செய்கிறார். திருமணத்தின் பின் அரவிந்தன் ஜேர்மனிக்கு புலம்பெயர்கிறார். பின்னாளில் சிநேகாவும் அவருடன் ஜேர்மனியில் இணைந்துகொள்கிறார். அங்கு முதியோர் பராமரிப்புப் பயிற்சிபெற்று அத்துறையில் பணியாற்றுகின்றார். தனது தந்தை பரமேஸ்வரம்பிள்ளையையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் சிநேகா, நரம்பியல் நிபுணர் நிரூபாவின் துணையுடன் தந்தையின் மூளைக்குள் ஆழப்பதிந்து கிடக்கும் அவரது நினைவகத்தை கணனிவல்லுநரின் துணைகொண்டு திறந்து பரமேஸ்வரம்பிள்ளையின் பழைய நினைவுகளை வெளிக்கொணர்ந்து அதனை நூலாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக கதை நகர்த்தப்படுகின்றது.