என்.செல்வராஜா. பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஐப்பசி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
80 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6601-44-7.
நூலியலாளர் என்.செல்வராஜாவின் 75ஆவது நூலாகவும் ‘ஜீவநதி’ வெளியீட்டகத்தின் 418ஆவது நூலாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் நூலியலாளரின் எழுபதாவது அகவை நிறைவையொட்டி 2024 ஐப்பசியில் வெளியிடப்பட்ட நான்கு சேவை நயப்பு வெளியீடுகளில் ஒன்றாகும். இதில் மலேசிய தமிழ் இலக்கியம்: ஒரு வரலாற்றுப் பார்வை, மலேசிய தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு: ஒரு வரலாற்றுப் பதிவு, மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கியங்களினூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள் ஆகிய மூன்று கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கெனவே இக்கட்டுரைகள் பல்வேறு காலகட்டங்களிலும் பன்னாட்டு ஊடகங்களில் எழுதப்பெற்றவை. தனி நூலாக ஈழத்து வாசகர்களுக்கு இதை தொகுத்து வழங்குவதன் வாயிலாக மலேசிய தமிழ் இலக்கிய வரலாற்றுக் கூறுகள் பற்றியும், அதன் வரலாற்றுப் பாதையில் ஈழத்தமிழர்கள் எவ்விடத்தில் இணைந்து கொள்கிறார்கள் என்பதையும் மலாயாவுக்கு தென்னிந்தியாவில் இருந்து முதலில் பிரித்தானிய காலனித்துவவாதிகளால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள் அங்கு எதிர்கொண்ட சமூகப் பிரச்சினைகள் பற்றியும் ஒரு வரலாற்றுப் பின்புலத்தை எமது தலைமுறையினர் விளங்கிக் கொள்ள முடியும்;. இதுவரை காலமும் ‘மலாயா பென்சனியர்’, ‘சிங்கப்பூர் பென்சனியர்’ என்ற சொற்பதங்களை மட்டுமே இலங்கையில் அறிந்து வைத்திருந்த இளைய தலைமுறையினருக்கு அந்தச் சொற்பதங்களின் பின்னால் கரந்துறைந்திருக்கும் ஒரு தனி வரலாறு பற்றிய புரிதல்களை இந்நூல் ஏற்படுத்தக்கூடும். இக்கட்டுரைகள் அண்மையில் இற்றைப்படுத்தப்பட்டு வீரகேசரி வார இதழில் பிரசுரமாகியிருந்தன. அக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது.