சண் தவராஜா, இ.தேவஅதிரன். சுவிட்சர்லாந்து: சிவராம் ஞாபகார்த்த மன்றம், இணை வெளியீடு, மட்டக்களப்பு: கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம், 1வது பதிப்பு, 2023. (திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர்).
(18), 382 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6050-01-6.
பத்திரிகையாளர் தர்மரத்தினம் சிவராம் (11.08.1959-28.04.2005) பற்றிய மனப்பதிவுகளின் தொகுப்பு. தராக்கி -இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் தமிழ்நெட்டின் பிரதான எழுத்தாளரும் முன்னாள் போராளியுமாவார். கொழும்பு பம்பலப்பிட்டியில் காவல் நிலையம் முன்பாக வெள்ளை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்ட இவர் தாக்கப்பட்ட பின்னர் வாகனமொன்றில் கொண்டு வரப்பட்டு இலங்கை பாராளுமன்றத்துக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிவராம் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பில் மகேஸ்வரி, புவிராஜகீர்த்தி தர்மரட்ணம் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சிவராமின் தந்தையார் கேம்பிறிட்ச் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அவரின் பாட்டனார் சபாபதிப்பிள்ளை தர்மரெட்ணம் (வன்னியனார்) 1938-ஆம் ஆண்டில் மட்டக்களப்பின் இரண்டாவது தெரிவு செய்யப்பட்ட இலங்கை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஆரம்பக்கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் கற்ற இவர் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், 1983 இல் இடம்பெற்ற இனக்கலவரங்களினாலும் பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார். சிவராம் அவர்கள் ‘தராகி’ என்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘The Island’ ஏட்டில் தமது முதலாவது கட்டுரையை 1989-இல் எழுதினார். அரசியல், போரியல் மற்றும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக அவரது கட்டுரைகள் அமைந்திருந்தன. உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் அவரது கட்டுரைகள் பெயர்பெற்றிருந்தன. இந்நூலில் தராக்கி பற்றிய தமது மனப்பதிவுகளை சித்திரலேகா மௌனகுரு, உ.சேரன், சி.மௌனகுரு, ப.மகாதேவா, எஸ்.கே.விக்னேஸ்வரன், சி.ரகுராம், தெ.மதுசூதனன், வீ தேவராஜ், நிலாந்தன், இரவி அருணாசலம், வீரகத்தி தனபாலசிங்கம், சர்வேந்திரா தர்மலிங்கம், பாரதி இராஜநாயகம், சிவராசா கருணாகரன், சிறீதரன் சோமீதரன், ச.அமரதாஸ், அ.நிக்சன், க.குணராசா, பூ.சீவகன், இரா.துரைரத்தினம், உலகத் தமிழர் ஆவண மையம், அ.சுகுமாரன், பி.எம்.ரவிச்சந்திரா, அகதித் தமிழன், பி.மாணிக்கவாசகம், பா.அரியநேத்திரன், என்.கே.துரைசிங்கம், ஏ.எல்.எம்.சலீம், வி.ரி.சகாதேவராஜா, எஸ்.கெ.ராஜென், பராபிரபா, ஞா.குகநாதன், இரா.தயாபரன், வே.தவச்செல்வன், மகாமுனி சுப்பிரமணியம், சி.பிரபாகரன், பிரசன்னா இந்திரகுமார், குசல் பெரேரா, ரூகி பெர்ணாண்டோ, ஜோஹன் மிக்கேல்சன், வைஷ்ணவி-வைதேகி மற்றும் சேரலாதன் (பிள்ளைகள்) ஆகியோர் வழங்கியுள்ளனர்.