கமிலஸ் துரைசிங்கம் (தொகுப்பாசிரியர்). ஜேர்மனி: கமிலஸ் துரைசிங்கம், ஒபகௌசன், 1வது பதிப்பு, 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).
24 பக்கம், ஒளிப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
அருட்கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவேல் அவர்களின் நாற்பது ஆண்டுகால (16.12.1966-2006) திருப்பணி வாழ்வின் நிறைவினை கொண்டாடும் முகமாகத் தொகுக்கப்பட்ட நூல். இதில் கருத்தியலும் செயலூக்கமும் இணைந்த எஸ்.ஜே. (அ.பி.ஜெயசேகரம்), 40 வருட இறைபணிப் பாதையில் ஒரு சந்திப்பு (நேர்காணல்), Ein tamilischer Prophet in der Fremde (von Pfarrer Albert Koolen, Krefeld) ஆகிய மூன்று ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் முன்னாள் குரு முதல்வரும், யாழ்ப்பாணம் புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், உலகத் தமிழ்ப் பேரவை என்ற புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்பின் தலைவருமாவார். இவர்; யாழ்ப்பாணத்தில் 1934 ஆம் ஆண்டில் பிறந்தார். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைக் கற்றபின்னர் 1958 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கொழும்பு வளாகத்தில் பயின்று அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிய பின்னர் குருத்துவ வாழ்வைத் தெரிவு செய்யும் பொருட்டு ரோம்நகரில் ஊர்பாணியா மறைப் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், இறையியல் ஆகிய துறைகளில் பயின்று பட்டம் பெற்றார். அடிகளார் 1966 டிசம்பரில் உரோமில் உள்ள புனித பேதுரு தேவாலயத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்படார். பின்னர் இலங்கை திரும்பி சில ஆண்டுகள் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் பணியாற்றினார். 1976 இல் மீண்டும் உரோமை சென்று இறையியலில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி கண்டி தேசிய குருத்துவக் கல்லூரியில் 1976 முதல் 1986 வரை இறையியல் விரிவுரையாளராகவும், இறையியல் பீடத் தலைவராகவும் பணியாற்றினார். பின்னர் 10 ஆண்டுகள் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியின் அதிபராகவும், 1997 முதல் யாழ் மறைமாவட்டத்தின் குருமுதல்வராகவும் பணியாற்றினார். 1995 அக்டோபரில் இலங்கை ஆயுதப் படைகள் குடாநாட்டின் மீது தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து இடம்பெற்ற வன்னி நோக்கிய மக்கள் இடம்பெயர்வினால் அங்கிருந்து வெளியேறிய ஐந்து இலட்சம் தமிழ் மக்களுடன் இம்மானுவேல் அடிகளும் வெளியேறி வன்னியில் இரண்டாண்டுகள் வாழ்ந்து வந்தார். 1997 இல் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையில், இம்மானுவேல் அடிகளார் இங்கிலாந்து சென்று அங்கு ஓராண்டு காலம் பணியாற்றிய பின்னர், செருமனியில், மூன்சுடர் மறைமாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 2007 ஆம் ஆண்டு வரை குருவானவராகப் பணியாற்றினார். இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த போது அவர் இலங்கைத் தமிழரின் உரிமைகளை வென்றெடுக்கும் பணிகளையும் பன்னாட்டு அரங்கில் முன்னெடுத்து வந்தார். 2010 ஆம் ஆண்டில் இம்மானுவேல் அடிகள் உலகத் தமிழர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.