வெ.சாமிநாதசர்மா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
(6), 101 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-685-115-1.
மோதிலால் நேரு (06.05.1861-0.02.1931) ஒரு இந்தியச் சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞருமாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவராக 1919-1920 மற்றும் 1928-1929 என இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இந்தியாவின் பெரிய அரசியல் குடும்பமான நேரு-காந்தி குடும்பத்தின் முன்னோடியான இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவின் தந்தையும் ஆவார். இந்நூலில் பண்டித மோதிலால் நேரு, லோகமான்ய திலகர் ஆகிய இருவரையும் பற்றிய வாழ்க்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது. பண்டித மோதிலால் நேரு பற்றி விரிவாக தியாகமூர்த்தி பண்டித மோதிலால் நேரு, தலைவர்களின் அபிப்பிராயம், சபைகளின் அனுதாபம், ஜனங்களின் துக்கம், பத்திரிகைகளின் புகழுரைகள், சிரார்த்தச் சடங்குகள், பண்டித ஜவஹரிலால் நேருவின் நன்றி ஆகிய தனித் தலைப்புகளின் வழியாக விரிவாக எழுதப்பட்டுள்ள போதிலும், லோகமான்ய திலகர் பற்றிய தனிக்கட்டுரை பக்கம் 77 முதல் 101 வரை சுருக்கமாகக் காணப்படுகின்றது. பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak 23.7.1856-01.08.1920) ஒரு இந்தியத் தேசியவாதியும் சமூக சீர்திருத்தவாதியும் விடுதலைப் போராட்ட வீரருமாவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான ‘லோகமான்ய’ என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் இவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69976).