செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
xx, 162 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4609-11-2.
ஆசிரியர் முகநூலில் தான் எழுதிய 80 பதிவுகளை முதல் 140 பக்கங்களிலும், அவற்றுக்குக் கிடைக்கப்பெற்ற வாசகர் பின்னூட்டங்களை பின்னைய 22 பக்கங்களிலுமாக பதிவுசெய்துள்ளார். கொரோனாப் பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட உள்ளிருப்பு (லொக் டௌன் Lock Down) முடக்கநிலைக் காலத்தில் அவரது நாய் ரெமி (Remy) கதைக்கத் தொடங்குகின்றது. தொடக்கமே கேள்விதான். ‘அடிக்கடி வெளியே போய் வருவாய். இரண்டு மூன்று நாட்களாக வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கிறாய்? இத்தனை தொழில்நுட்பத்தையும் அறிவையும் வைத்துக்கொண்டு உலக இயக்கத்தையே விரல் நுனியில் கொண்டு வந்த உங்களுக்கு இதைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதோ?”என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கும் ரெமியின் பார்வைகள் அவருக்குள் பல கேள்விகளை எழுப்புகின்றன. அதற்கான பதில்கள் வாசகருக்கு நல்ல விருந்தாகவும் அமைந்துவிடுகின்றது. அத்தனை கேள்விகளும் மனித சமூகத்தின் வாழ்வையும் சூழலையும் கேள்விக்குள்ளாக்கி ஒரு புதிய அறிவுசார் ஜனநாயகப் பண்பாட்டு அலையை உருவாக்க முயற்சிக்கின்றன.