செல்லத்துரை சுதர்சன். யாழ்ப்பாணம்: எஸ்.பவித்திரன் ஞாபகார்த்த நிறுவகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
(10), 68 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 18×13 சமீ., ISBN: 978-624-5709-30-4.
சுவாலை என்னவாகும், சிறு குடிலின் பசி, சிவப்புகள் கரைவதில்லை, ஒரு பொழுதும் இப்பொழுதும், விழுங்கிய சுதந்திரம், இரு மொழியில் ஒரு கீதம், ஒரு மாலையும் பின்னிருளும், கேலிப் பட்டாசும் கோவணக் கட்டியும், நீல அல்லியும் செங்காந்தளும், இரு நெருப்பு, தாயுரைக் கஞ்சி, ஆவிகளின் தலைநகர், பொடிமெனிக்கா மகனோடு பேசல், வரலாற்றின் பள்ளத்தாக்கு, யானை நரி ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இந்நூலுக்கான சேரனின் அணிந்துரையில் ‘காலிமுகத்திடல் போராட்டமும் எழுச்சியும், வாழ்விலும் வரலாற்றிலும் அரசியலிலும் இருந்து ஒழிக்கப்படுவதற்கும் ஒளிக்கப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே அவை இலக்கியமாவது அவசியம். இக்கவித்தொகை தமிழின், தமிழ்பேசும் மக்களின் உணர்வுத் தோழமையைக் கவித்துவமாகவும் கிளர்ச்சியுடனும் வெளிப்படுத்துகின்ற குரலாக அமைகின்றது. அரசியல் நுண்ணுணர்வும் கூர்மையான விமர்சன உணர்வும் கூடிய தாக்கம் மிக்க எதிர்ப்பு அரசியல் கவிதைகளின் தொகை இது. இக்கவிதைகள் நிகழ்காலத்துடன் முடிந்துவிடுகின்ற செயற்கையான தற்காலிகக் கவிதைகள் அல்ல. காலந்தோறும் எதிர்ப்பையும் அதன் வரலாற்றையும் தேவையையும் எம்மவரோடும் அயலவரோடும் வீச்சுடனும் புரிந்துணர்வோடும் விமர்சனங்களோடும் பாடுகிற கவிதைகள் இவை” என்று குறிப்பிடுகிறார்.