நவம் (இயற்பெயர்: சீனித்தம்பி ஆறுமுகம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், 20/2, சக்காரியா காலனி, முதலாவது தெரு, சூளைமேடு, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன் கிரியேஷன்ஸ், சக்காரியா காலனி, சூளைமேடு).
144 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 17.5×11.5 சமீ., ISBN: 978-93-81322-05-5.
வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவந்த செய்தியொன்றின் கருவில் விளைந்த “நீலவேணி”, 37 சிறு தலைப்புகளின்கீழ் விறுவிறுப்பான மர்ம நாவலாக விரிந்துள்ளது. நிழல் மனிதன் என்னும் முதலாம் அத்தியாயத்தில் தொடங்கி பாரிஸ் நகரப்பெண்ணாக வலம்வரும் நாயகி, அவளோடு உறவாடத் துடிக்கும் தணிகாசலம், அவரின் மனைவியின் கொலை மர்மம், கதையைத் தொடரும் நிழல் மனிதன், இவர்களுக்கு மத்தியில் சுற்றிச் சுழலும் நீலவேணி என்னும அழகியின் ஊடாட்டம் என்பன கதையை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. ஆரையம்பதி நவம் என அறியப்பெற்றவரும், நீலவேணி, குமரி முதல் சென்னை வரை, அழகு சுடும், நந்தாவதி, வாரிசுகள் ஆகிய நூல்களின் ஆசிரியருமான சீனித்தம்பி ஆறுமுகம் (நவம்) அவர்கள் இலங்கையில் பயிற்றப்பட்ட தமிழாசிரியராக இரத்தினபுரி, கொழும்பு, கிரான், கல்லடி, ஆரையம்பதி, கிரான்குளம் ஆகிய ஊர்களில் பணியாற்றியவர். பின்னர் புலம்பெயர்ந்து 1990 முதல் 2012 வரை தமிழ்நாட்டிலும் பின்னர் 2013 முதல் 2015 வரை கனடாவிலும் வாழ்ந்தவர். 2015இல் மீண்டும் தன் பிறந்த மண்ணான ஆரையம்பதிக்கு வந்து 12.4.2017இல் மரணிக்கும் வரையில் அம்மண்ணிலேயே வாழ்ந்தவர். இவர் முன்னர் 1974இல் ”நிழல் மனிதன்” என்ற பெயரில் வெளியிட்ட நாவல் மித்ர வெளியீடாக தலைப்பு மாற்றப்பட்டு “நீலவேணி” என்ற பெயரில் தமிழகத்தில் மீள்பிரசுரமாகியுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20336).