குரு.அரவிந்தன். திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, 2021. (சென்னை: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).
224 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 150.00, அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-81-948821-9-0.
நெய்தலும் மருதமும் (26 அத்தியாயங்கள்), கள்ளிக்காடும் கண்ணீர் நாடும் (4 அத்தியாயங்கள்), ஆறாம் நிலத்திணை (2 அத்தியாயங்கள்) ஆகிய விரிவான மூன்று கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. குரு அரவிந்தனின் எழுத்துகளில் தென்றலின் மென்மையும், புயலின் வன்மையும் கலந்து வீசுகின்றன. நகைச்சுவைச் சிற்றாறும், கோபப் பெருங்கடலும் சங்கமித்து ஓடுகின்றன. இடம், பொருள், நிகழ்ச்சி, பாதிப்பு, மனவெழுச்சி, தன்மானம் என்னும் வழித்தடங்களில் தனது தடம் மாறாது பயணிக்கிறது இவரது எழுதுகோல். மருதம், நெய்தல், முல்லை, குறிஞ்சி, பாலை என்று ஐந்து திணை நிலங்களாகத் தமிழர் வாழ்ந்த இடங்களைச் சங்க இலக்கியங்களில் அடையாளப்படுத்தி இருந்தனர். நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடுதான் “நிலத்திணை” என்று அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியம் இருந்தது. இடைக்காலச் சங்க காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியரின் தொல்காப்பியத்தில் இந்த நான்கு திணைகளும் தான் இடம் பெற்றிருக்கின்றன. பின்னாளில் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொண்டபோது அது ஐந்தாவது திணையாகத் தமிழ் இலக்கியத்தில் கணிக்கப்பட்டது. காலத்திற்கு ஏற்ற தேவை கருதிச் சங்ககால நான்கு திணைகள் ஐந்தாக மாறும் போது, இன்றைய தேவை கருதி ஆறாக மாறுவதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஆறாம் நிலத்திணையாக பனியும் பனி சூழ்ந்த பகுதியும் “பனிப்புலம்” என்று முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இதில் முக்கியமாகப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் கனடா நாட்டு “பனியும் பனி சூழ்ந்த நிலமும்” குறிப்பிடத்தக்கது. இப்படைபபிலக்கியத்தில் கட்டுரையா? புதினமா? என்று வாசிப்பவர் ஐயுறும் வண்ணம் நகர்கின்றன அத்தியாயங்கள். புலம்பெயர்ந்த தமிழரொருவர், தமது தாயகத்தில் நிகழ்ந்தவற்றை மனதில் சுமந்து பாரம் தாங்காமல் புத்தகச் சுமைதாங்கிக் கல்லில் அதை இறக்கி வைத்திருக்கிறார். ஆறாம் நிலத்திணை என்று புத்திலக்கணம் படைக்கிறார். பனியும் பனி சார்ந்த இடமும் பனிப்புலம் என்று இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாகத் தமிழர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டினைக் கவனப்படுத்தி இருப்பது புதுமை. இந்நூலின் அடுத்த பகுதியாக “கள்ளிக்காடும் கண்ணீர் நாடும்” என்ற தலைப்பில் கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகளோடு, கட்டுரையைத் தொடங்கி, இலங்கையின் பண்புகளைக் கள்ளிக்காட்டு இதிகாசத்தோடு ஒப்புமைப்படுத்தி எழுதியிருக்கிறார்.