16931 ஓ தோழனே … நந்தினி.

பால. சுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி). 

iv, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ.

அனாமிகா பதிப்பகம் நம் மத்தியில் வாழ்ந்த கலை இலக்கியவாதிகளுக்கு மதிப்பளிக்கும் முகமாக அவர்கள் பற்றிய நினைவுத் தொகுப்புக்களை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் மிகக் காத்திரமாக முற்போக்கு கலை இலக்கியம் என தொழிற்பட்ட நந்தினி சேவியர் பற்றிய நினைவுகளைச் சுமந்து நிற்கின்றது இந்நூல். தே. சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் (25.05.1949-16.09.2021) ஈழத்துப் படைப்பாளிகளில் ஒருவர். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியவர். தனது பாடசாலைக் கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். பின்னர் யாழ் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சீனச் சார்பு) வாலிப சங்க இயக்கத்தில் இணைந்து செயற்பட்டவர். இலக்கியச் செயற்பாடுகளுடன் சமூகச்செயற்பாடுகளிலும் முன்நின்று உழைத்தவர். நந்தினி சேவியர் இறந்தபோது முகநூலில் பதிவிட்ட 51பேரின் உணர்வுப் பெருக்காய் இந்த நூல் அமைகின்றது. நம் சமூக அமைப்பின்மீது அதன் சாதிய வன்மம் பற்றி உரக்க குரல் எழுப்பியவர் தோழர் நந்தினி சேவியர். சாதி எதிர்ப்பு போராட்ட களத்தில் ஒரு போராளியாய் களம் கண்டவர். மார்க்சியத்தை அதன் ஆழ அகலத்தை புரிந்து கொண்டவர் இவர். எதிர்காலம் மார்க்சியத்துக்கானது என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட மார்க்சியர். போலித்தனங்கள் அற்ற மார்க்சிய கலை இலக்கிய அரசியலாளர்.

ஏனைய பதிவுகள்

16607 சந்தனப் பெட்டியும் கிலாபத் கப்பலும்: குறுங்காவியங்கள்.

மருதூர்க் கனி (இயற்பெயர்: யூ.எல்.எம்.ஹனீபா). தெகிவளை: விடுதலை விருட்சம் வெளியீட்டகம், இல. 11, 4வது ஒழுங்கை, கௌடானா புரோட்வே, 1வது பதிப்பு, ஜீன் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).