பா.வாசு (தொகுப்பாசிரியர்). கொடிகாமம்: அமரர் கந்தையா பாலச்சந்திரன் நினைவு வெளியீடு, கச்சாய் வீதி, 1வது பதிப்பு, வைகாசி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xiv, 134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-97831-0-2.
பல்துறை சார்ந்த சிறு கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள தொகுப்பு. தமிழில் அறியாதவை, காவியத்தில் அறியாதவை, வாழ்வியல் கலையில் அறியாதவை, சட்டத்தில் அறியாதவை, விஞ்ஞானத்தில் அறியாதவை, சில ஆய்வுகளும் சிந்தனை ஊக்கிகளும், பின்னிணைப்புக்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் கீழ் எழுதப்பட்ட 28 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழ் எழுத்து வடிவங்கள், தமிழ் எண்கள், இராவணன், சகுனி, கண்ணகி பற்றிய சுவையான தகவல்கள், யாழ்ப்பாணத்து ஓலைப் பயன்பாடு, தெருமூடி மடம், புலம்பெயர் வாழ்வு, பிதிர்க் கடன், காணி தொடர்பான நடைமுறைகள், தேசவழமை, யூகோளம், காலப் பயணம், ஏரியா 51, ஒளியியல் மாயை, தூக்கத்தின் முக்கியத்துவம், மறுபிறப்பு, ஆழ்கடல் அதிசயங்கள், கருந்துளைகள், பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் பிரச்சினை என பல்வேறு தகவல்களையும் இந்நூல் உள்ளடக்குகின்றது. யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியல் உள்ள விடத்தற்பளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அமரர் கந்தையா பாலச்சந்திரன் (19.11.1952-13.04.2021) அவர்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த வேளையில் இவர் 1975இல் வங்கித் துறையில் இணைந்து பணியாற்றி ஓய்வுபெற்றவர்.