எம்.கேசவராஜா (ஆசிரியர்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). கொழும்பு: எம்.வாமதேவன், தலைவர், அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், 39, 36ஆவது ஒழுங்கை).
iv, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ.
இது அமரர் இர.சிவலிங்கம் அவர்களின் 21ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை. இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பொருளியலாளரான எம்.கேசவராஜா அவர்களால் 20.02.2021 அன்று ஆற்றப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் பிராந்தியத்தில் ஆரம்பித்த கொவிட்-19 இன் விரைவான பரம்பல் மற்றும் அதனது வீரியத் தன்மை என்பவற்றைக் கருத்திற்கொண்டு 2020 ஜனவரி மாதம் 30ஆம் திகதி உலகளாவிய அவசர நிலையை அறிவித்திருந்தது. தொடர்ந்து 2020 மார்ச் மாதம் 11ஆம் திகதி இதனை ஒரு உலகளாவிய தொற்றுநோயென (Pandemic) அறிவித்தது. இவ்வைரஸ் உலக நாடுகளில் மிகவும் வேகமாகப் பரவியிருந்தது. இலங்கையில் முதலாவது கொவிட்-19 தொற்று நோயாளர் 11.3.2020 அன்று அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார நிறுவனப் பள்ளிவிபரங்களின் படி 18.01.2021 வரையான காலப்பகுதியில் உலகில் 94 மில்லியனுக்கு மேற்பட்டோர் இத்தொற்றுக்கு உள்ளாகியிருந்தமையும் ஏறத்தாழ 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையும் அறியப்படுகின்றது. இலங்கை சுகாதார அமைச்சின் தரவுகளின் படி 18.01.2021 வரையான காலப்பகுதியில் 54000இற்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 இன் காரணமாக நோயாளிகளாக இனம்காணப்பட்டிருந்தனர். 270 பேர் உயிரிழந்திருந்தனர். (பின்னர் முழுவீச்சுடன் விரிவடைந்த தொற்றின் காரணமாக 2021 ஒக்டோபர் மாதமளவில் 5,23,550 தொற்றாளர்களும், 13,229 உயிரிழப்புகளும் பதிவாகியிருந்தன- ஆதாரம் Gavi-The Vaccine Alliance). இப்பேருரையில் கோவிட்-19 பெருந்தொற்று மலையக சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பாதிப்பினையும், அதனால் ஏற்பட்ட சமூக பொருளாதார விளைவுகளையும் தெளிவாக விபரிக்கின்றது.