செபமாலை பெனடிக்ரா. மன்னார்: செல்வி செபமாலை பெனடிக்ரா, ஆசிரியை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2019. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-624-95489-0-9.
மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் நிதி ஆதரவுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் சிறுவர்களுக்கான ஆக்கப் பாடல்களும், ‘மாற்றம்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட சிறுவர் நாடகமும் இடம்பெற்றுள்ளன. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி மாணவியாக உள்நுழைந்து, 2002இல் இளங்கலைமாணிப் பட்டதாரியானவர் செல்வி செபமாலை பெனடிக்ரா. இவர் 06.11.1972இல் மன்னாரில் (கன்னாட்டி, அடம்பன்) பிறந்தவர். கைதடி நவீல்ட் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப்பெற்ற இவர் யாழ் மருதனார் மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். 14 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றும் இவர், பாடசாலை மாணவர்களுக்கான கலை, கலாசாரப் போட்டிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் தாராளமான பங்களிப்பை வழங்கி வருகிறார். மேடை நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள் என்பவற்றையும் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.