எஸ்.சாஹிர் ஹீஸைன். அக்கரைப்பற்று-01: மனிதம் வெளியீடு, 315, C.E.B.வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1999. (அக்கரைப்பற்று-02: ரிமார்ஸ் ஓட்டோ ஓப்செட், இலங்கை வங்கி வீதி).
24 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 19×12.5 சமீ.
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றவேளையில் 01.03.1999 அன்று நண்பர்களுடன் கடலில் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறந்த அக்கரைப்பற்று எஸ்.சாஹிர் ஹீஸைன் அவர்கள் எழுதிய கவிதைகளின் தொகுப்பினை அவரது நண்பர்களான அப்துல் ரசாக், ரஃபியூஸ், காலித், சம்சுதீன், ஹஸீன் ஆகிய ஐவரும் தயாரித்து, மறைந்த தம் நண்பனின் நினைவாக வெளியிட்டுள்ளனர். எஸ்.சாஹிர் ஹீஸைன் இளமையிலேயே இலக்கியத்துறையில் ஆர்வம் கொண்டவர். பாடசாலையில் 1996இல் க.பொ.த. உயர்வகுப்பில் கல்வி கற்றவேளையில் ‘மனிதம்’ என்ற பெயரில் இலக்கிய வட்டமொன்றினை அமைத்துக்கொண்டு இலக்கிய உலகில் சஞ்சரித்த இளைஞர் குழுவொன்றில் இடம்பிடித்தவர் இவர். பரிதாபம், மீண்டும் மீண்டும் உறக்கமற்ற இரவு, நீலக்கடல், ஏதோ என்னமோ பிரிகின்றது உன் மனசுக்குள் நெடுநேர நடுக்கம், சோக ராகம், மரித்து ஓடும் ஓர் உணர்வு, அம்றிற்கு, நினைவின் ஆறுதல் நெருப்பு, சீதனம் ஆகிய தலைப்புகளில் இவர் எழுதிய கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25430).