புத்தூர் கு.குகன் (புனைபெயர்: கு.குகானந்தன்). யாழ்ப்பாணம்: கு.குகானந்தன், புத்தூர், 1வது பதிப்பு, ஜீலை 2014. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், கஸ்தூரியார் வீதி).
(7), 74 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15.5 சமீ.
கவிஞர் புத்தூர் கு.குகன் அவ்வப்போது உள்ளூர் பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரித்த கவிதைகளின் தொகுப்பு. இலக்கியம் என்ற பிரிவில் 14 கவிதைகளும், சமூகம் என்ற பிரிவில் மேலும் 30 கவிதைகளுமாக மொத்தம் 44 கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. தம்மைப் படிப்பித்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களின் முதுமைக் காலத்தில் கைவிட்டுச் செல்லும் பிள்ளைகளைப் பற்றி ‘பாசமும் பரிவும்’ என்ற இவரது கவிதை பேசுகின்றது. விவசாயம் செய்து மண்ணில் பெற்ற தரமான மரக்கறிகளை உண்டு வளர்ந்ததொரு சமூகம் இன்று விரைவு உணவுகளே கதியென்று கிடக்கும் கொடுமைகளையும் சில கவிதைகள் பேசுகின்றன. சீதனக் கொடுமை, இனவுணர்வு எனப் பல விடயங்களை இக்கவிதைகள் தொட்டுச் செல்கின்றன.