15611 ரகசியத்தின் நாக்குகள்.

நெற்கொழுதாசன். சென்னை 600 005: கருப்பு பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (சென்னை 600005: ஜோதி எண்டர்பிரைசஸ்).

80 பக்கம், விலை: இந்திய ரூபா 60.00, அளவு: 21.5×14 சமீ.

நெற்கொழுதாசனின் கவிதை தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் காத்திரமான கவிதைகள். ஒரு புலம்பெயரியின் திரும்பக் கிடைக்காத ஓர் இறந்தகாலத்தையிட்ட சோகம் அல்லது பிரிவாற்றாமை  இவரது கவிதைகளின் அடிநாதமாகின்றன. இவற்றில் புலம் பெயர் நாட்டில் உள்ள ஒருவனது இருப்பு பற்றிய ஆவேசம் வலிகளாக வெளிவருகின்றது. தன் கவிதைகளில் பெரும்பாலும் தனது இருப்பு பற்றிய உறைநிலையையே இக்கவிஞர் காட்ட விழைகின்றார். இத்தொகுதியின் பெரும்பாலான கவிதைகள்  இவர் தாய்நிலத்தைப் பிரிந்து புலம்பெயர்ந்த பின்னர் எழுதப்பட்ட கவிதைகளாக உள்ளன. வடமராட்சியில் கடற்காற்றை நுகரும் ‘நெற்கொழு’ என்ற ஒரு விவசாயக் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நாலாம் கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் பாதைகள் மூடப்பட்டபோது 2006இல் அவர் புலம்பெயர்ந்தவர். அந்த ஏழாண்டு காலத்துப் புலம்பெயர்வின் சோகம் இக்கவிதைகளில் பதிவாகியுள்ளன. உங்களுக்கும் தான், எனக்கான பாடல், எனது வீடும் இருப்பும், தொலைக்கப்பட்ட அன்பு, உயிர் தின்னிகள், வாருங்கள் பொங்கலிடுவோம், இது மாரிகாலம் எந்தனூரில், யாதொன்றினதும் கைதிகள் அல்ல, நானில்லாத எனது அறையில், மைகளாலும் புணரப்படுபவன், வேர்கள் அலைகின்றன, நுகராத வாசனை, பகிரப்படாத அல்லது பகிர முடியாத, எச்சங்களாக தானிருக்கிறோம் நீங்களும் நானும், விடாத அல்லது விடக்கூடாத, கானல், ரகசியத்தின் நாக்குகள், காலங்கள் மீது பயணிக்கும் காதல், இயங்குதலே இயக்கமாக, வேலிகள் இழந்தபின், வாசித்தாலென்ன விட்டாலென்ன, தங்கிய வேர்கள், முகமின்னும் மீதமிருக்கிறது, இனியாவது சொல்லிவிடு, மௌனத்தின் ஒலிக்குறிப்பு, நியமம், காலம் எனதாகும், எங்கள் நிலத்தில், புன்னகைகளின் மரணம், இவன், காலமாற்றம், முடிவே தலைப்பு, கனத்த மனதின் ஒரு பக்கம், அது போதும் எனக்கு, நாளொன்றின் வெற்றிடத்தில், கசியும் வேர்கள், பேசுபொருளாவேன் ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்