15929 ஈழத்து அரங்கமரபில் பிரான்சிஸ் ஜெனம்: தன்மையும் படர்க்கையும்.

யோ. யோண்சன் ராஜ்குமார் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைச்சோலை, 793 (425), நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்).

viii, 126 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300.00, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-35664-0-9.

அரங்கக் கலைஞர் பிரான்சீஸ் ஜெனம் சில்லாலையைப் பிறப்பிடமாகவும், திருமணத்தின் பின்அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவர். ஐக்கிய கூட்டுறவுச் சங்கத்தில் வரிப் பரிசோதகராக பணியாற்றி 1995 இடப்பெயர்வின் பின் கொழும்பில் திருமறைக் கலாமன்றத்தினருடன் பணியாற்றி வந்தவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக படிப்படியாகக் கண் பார்வையிழந்து வத்தளையில் 29.04.2017 இல் தன் 76ஆவது அகவையில் மரணிக்கும் வரை அங்கேயே வாழ்ந்துவந்தவர். அவரது இழப்பின் வெளியில் நின்று அவரது       வாழ்வையும் அரங்கியல் அனுபவங்களையும் இந்நூல் பதிவு செய்கின்றது. ‘தன்மை” என்ற முதல் பிரிவில் கலையில் கால் வைத்த பள்ளிப் பருவம், பி.எஸ்.கலாமன்ற நாடகங்களில், கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகத்தில், மானிப்பாய் மறுமலர்ச்சிக் கழகத்தில், வண்ணை கலைவாணர் நாடக மன்றத்தில், நிழல் நாடக மன்றத்தில், பூந்தான் யோசேப்புவும் நவரச நாட்டுக்கூத்து கலாமன்றமும், திருமறைக் கலாமன்றமும் நானும், நாடக அரங்கக் கல்லூரியும் நானும், நடித்தலின் பட்டறிவு, நெறியாக்க அனுபவங்கள் ஆகிய தலைப்புகளில் இவரது கலையுலக வாழ்வு அவரால் நினைவுகூரப்பட்டுள்ளது. தொடர்ந்து ‘படர்க்கை’ என்ற இரண்டாம் பிரிவில் பிரான்சீஸ் ஜெனம் பற்றி குழந்தை ம.சண்முகலிங்கம், நீ.மரிய சேவியர் அடிகள், ப.சிறீஸ்கந்தன், ஜி.பீ.பேர்மினஸ், ச.உருத்திரேஸ்வரன், க.பாலேந்திரா, சொ.சண்முகநாதன், யோ.யோ.ராஜ்குமார், ஏ.ரகுநாதன், பா.ஆனந்தராணி, பேராசிரியர் சி.மௌனகுரு, யூல்ஸ் கொலின், தே.தேவானந், தெளிவத்தை ஜோசப் ஆகிய பிரமுகர்களின் மனப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 71551).

ஏனைய பதிவுகள்