15935 இணுவிலாசிரியர் அளவைவாசர் முதுபெரும் புலவர் திரு.வை.க.சிற்றம்பலம் அவர்களது வாழ்க்கை வரலாறு.

எஸ்.சிவானந்தராஜா (பதிப்பாசிரியர்). பண்டத்தரிப்பு:  எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, டிசம்பர் 2015. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், சங்கானை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

இணுவிலாசிரியரும் அளவை (அளவெட்டி) வாசருமான  முதுபெரும் புலவர் கலாபூஷணம், புலவர்மணி, கவியோகி, மரபுக்கவிஞர், ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு.வை.க.சிற்றம்பலம் அவர்கள் தனது 101-ஆவது வயதில் 02.11.2015அன்று காலமானார். அவரது மறைவையொட்டி, வை.க.சிற்றம்பலம் அவர்கள் தனது கையால் எழுதிவைத்த வாழ்க்கைக் குறிப்புகள், பணி செய்த பாடசாலைகள், இயற்றிய இலக்கியங்கள் என்பனவற்றின் துணையுடன் நூலாசிரியரின் மகனார் இவ்வரலாற்றை எழுதியுள்ளார். சுருக்க வெளியீடாக உள்ள இந்நூலின் விரிவாக்கத்திற்கு வேண்டிய மேலதிக தகவல்களையும் தேடி அவரது நண்பர்களிடமும் மாணவர்களிடமும் தமிழறிஞர்களிடமும் விண்ணப்பித்துள்ளார். அமரர் வை.க.சிற்றம்பலம் இணுவில் கிராமத்தில் 16.09.1914இல் பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி மண்ணில் மணம் முடித்து அளவெட்டியிலேயே நிரந்தரமாக வாழ்ந்தவர். இவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உளர். ஆரம்பத்தில் தமிழ் ஆசிரியராக இவர் கடமை புரிந்தார். இவரும் இவர்காலத்து தமிழாசிரியர்களும் நன்னூல் காண்டிகை உரையையே ஐயந்திரிபறக் கற்றவர்கள். தமிழ்மொழியில் திறமை வாய்ந்தவராக இருந்த போதும் அவர் செய்யுள் இயற்றும் வன்மையுடையார் என்பது அவர் ஓய்வுபெறும் வயதுவரும் வரை எவருக்கும் தெரியாமலே இலைமறைகாய் இருந்து வந்துள்ளது. ஓய்வுபெற்ற பின் சிற்றம்பலம் அவர்கள் செய்யுள் இலக்கணத்தையும் பாட்டியல் இலக்கணத்தையும் நன்கு கற்று செய்யுள் இயற்றலில் தீவிரமாக ஈடுபட்டார். ஓசைநயம், பொருள்நயம், இலக்கணநயம் அமைந்து இவரது செய்யுள்கள் சிறப்புற விளங்குகின்றன.

ஏனைய பதிவுகள்