சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: திணைப்புனம் வெளியீடு, இமையாணன், உடுப்பிட்டி, 1வது பதிப்பு, ஜுன் 2023. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
viii, 68 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51949-7-6.
தமிழியல் ஆய்வ நடுவகத்தால் ‘சமகால இலக்கிய முயற்சிகள்’ எனும் தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வரங்கு கிளிநொச்சி மாவட்டத்தினை அடிப்படையாகக்கொண்டு அம்மாவட்டத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வாக நடத்தப்பட்டது. அதில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின் நூலுருவே இதுவாகும். ஏழுமலைப் பிள்ளையும் கலைவாழ்வும், ஏழுமலைப் பிள்ளையின் படைப்புக்கள், எழுத்துருக்களின் உள்ளடக்கம்-உத்தி, மதிப்பீடு ஆகிய நான்கு இயல்களில் அமைந்த இந்நூலில் சின்னார் வல்லிபுரம் ஏழுமலைப்பிள்ளை அவர்களின் வாழ்வும் பணியும் விரித்து நோக்கப்பட்டுள்ளன. ஏழுமலைப்பிள்ளை யாழ்ப்பாணம் மயிலிட்டியில் 1953 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 05ஆந் திகதி பிறந்தவர். தற்போது மலையாளபுரம் கிளிநொச்சியில் வாழ்ந்து வருகிறார். தனது ஆரம்பக் கல்வியை யாழ் மயிலிட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் பின்னர் யாழ் காங்கேசன்துறை அமெரிக்கன் மிஷன் ஆங்கில மகா வித்தியாலயத்திலும் பயின்றவர். அவரது பாடசாலைக் காலத்தில் ஆண்டு விழாக்களில் மேடையேற்றப்பட்ட வீரபாண்டிய கட்டப்பொம்மன், சாம்ராட் அசோகன், ஒதெல்லோ, வெனிஸ் நகர வணிகன், மார்க் அன்ரனி ஆகியவற்றில் கதாநாயகனாக நடித்துப் புகழ் பெற்றவர். இவர் தனது 15 ஆவது வயதில் (1968) இலங்கையில் முதற்திரைப்படத்தை இயக்கியவரும் இலங்கைச் சினிமாவின் தந்தையென அழைக்கப்படுபவருமான ஹென்றி சந்திரவன்சவினால் சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். 1969 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினர் தமது 25 ஆவது ஆண்டுவிழாவையொட்டி நடாத்திய பேச்சுப் போட்டியிலும் இவர்;முதற்பரிசான தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.