13286 நாளைய பெண்கள் சுயமாக வாழ: கட்டுரைகள்.

சந்திரவதனா செல்வகுமாரன். ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, ஜுன் 2019. (ஜேர்மனி: Stuttgart).

84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-3-9813002-5-3.

பெண்ணே நீ நெருப்பாகவும் வேண்டாம், செருப்பாகவும் வேண்டாம். உனது இருப்பு உனது விருப்போடு உனதாக இருக்கட்டும் என்ற அடிநாதத்துடன் எழுதப்பட்ட பெண்கள் சார்ந்த சமூகவியல் கட்டுரைகளின் தொகுப்பு இது. 1999 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் சந்திரவதனா எழுதிய கட்டுரைகள். நாளைய பெண்கள் சுயமாக வாழ இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள், கலாச்சாரமும் பண்பாடும் பெண்களுக்கு மட்டும் தானா?, ஆண்-பெண் நட்பு, புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் உளவியல் பிரச்சினைகள், புலம்பெயர் வாழ்வில் தமிழ்ப் பெண்களின் எதிர்காலம், புலம்பெயர் வாழ்வில் திருமணமாகாத பெண்களின் எதிர்காலம், புலம்பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப் பெண்கள், பெண் அடங்க வேண்டுமா?, இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச் சடங்கு அவசியந்தானா?, பெண் ஏன் அடக்கப்பட்டாள்?, பெண் விடுதலை என்றால், குடும்பம் என்றால் என்ன?, பெண்களும் எழுத்தும், சர்வதேசப் பெண்கள் தினம் ஆகிய 15 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புலோலி மேற்கு ஆத்தியடியைச் சேர்ந்த சந்திரவதனா 1986இலிருந்து ஜேர்மனியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார். 1975முதல் எழுதிவரும் இவர் வானொலி, பத்திரிகை, சஞ்சிகை, இணையத்தளம் என அனைத்து ஊடகங்களின் வழியாகவும் தன் இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர். இவரது முன்னைய நூல்களான மன ஓசை, அலையும் மனமும் வதியும் புலமும் (பத்திகள்) ஆகியவற்றைத் தொடர்ந்து வெளிவரும் மூன்றாவது நூல் இது.

ஏனைய பதிவுகள்