ஹம்சியா பரீதா ஷரிபுத்தீன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: அன்னை வெளியீட்டகம், No 16, School Avenue, Off Station Road, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(10), xvi, (30), 430 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 1500., அளவு: 25×18.5 சமீ., ISBN: 978-955-0122-02-8.
காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீபுத்தீன் எனும் தமிழ் இலக்கிய ஆளுமையின் 75வது வயதினை முன்னிட்டு கொண்டாடப்படுகின்ற பவளவிழா நிகழ்வில் காப்பியக்கோவின் இலக்கிய பணிகள் மற்றும் காப்பியக்கோ பற்றிய மற்றவர்களின் மனப்பதிவு என்பன நூலாக்கப்பட்டு ‘காப்பியக்கோ 75’ என்ற தலைப்பில் இந் நூல் 26/11/2017 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 445 பக்கங்கள் கொண்ட இப்பாரிய தொகுப்பில், தமிழ் இலக்கியப் புலத்தில் ஆர்வத்துடன் செயலாற்றும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆகியோருக்கு இந்நூல் ஜின்னாவின் இன்னொரு முகத்தை அடையாளப்படுத்துகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத மரபுக் கவிஞராய் இலக்கியவாதிகளை அண்ணாந்து பார்க்க வைத்தவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன். கிழக்கு மண்ணின் மருதமுனையின் ஈடிணையற்ற தமிழ் ஆளுமையான புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களின் இலக்கிய வாரிசு இவர். 1970களில் ஆரம்பித்த இலக்கியப் பணி இன்றுவரை தொடர்கின்றது. தமிழ் இலக்கியத்தின் பல்பரிமாண ஆளுமை கொண்ட இவர், பல காவியங்கள் படைத்ததோடு சிறுகதை, புதினம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு போன்ற இதர துறைகளிலும் தடம் பதித்தவர். பத்தாயிரத்துக்கும் அதிகமான செய்யுள்களைக் கொண்டு பதினொரு காவியங்களை இந்த நவீன இலக்கிய மரபின் ஆளுகைக்குள்ளும் படைத்துக் காட்டியவர். சுமார் ஐந்து தசாப்தங்களாக இலக்கியப் பணி புரியும் இலக்கிய உழைப்பாளி. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062992).