தாழை செல்வநாயகம். வாழைச்சேனை: கலாபூஷணம் தாழை செல்வநாயகம், கல்குடா வீதி, பேத்தாழை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
x, 122+21 பக்கம், புகைப்படங்கள், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: ரூபா 245.00, அளவு: 19×14.5 சமீ.
தாழை செல்வநாயகம் இந்நூலில் தனது தாய்மண்ணான வாழைச்சேனை பற்றிய பொதுநோக்கு, வணக்கத்தலங்கள், கல்விக்கூடங்கள், கலைத்துறை ஆகிய நான்கு இயல்களின் வழியாக பல்வேறு பிரதேச வரலாற்றுத் தகவல்களைப் பதிவுசெய்திருக்கிறார். கல்குடாத் தொகுதியின் தலைநகராகத் திகழும் வாழைச்சேனையின் கிழக்கு எல்லையாக இவரது பெயரைத் தாங்கும் பேத்தாழைக் கிராமம் உள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் வாழைச்சேனையாகும். இந்நகரம் மட்டக்களப்பு நகரிற்கு வடக்கே 30 கிமீ தொலைவிலும் பொலன்னறுவைக்குக் கிழக்கே 70 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. கொழும்பு-மட்டக்களப்பு தொடருந்துப் பாதையும் ஏ-15 நெடுஞ்சாலையும் இந்நகரூடாகச் செல்கின்றன. இந்தியப் பெருங்கடலில் புகழ் பெற்ற பாசிக்குடா கடற்கரை வாழைச்சேனை நகரில் இருந்து 3 கிமீ. கிழக்கே அமைந்துள்ளது. வாழைச்சேனை ஆற்றுடன் இணைந்து தற்போது அமைக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகம் ஒரு காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்கியது. வாழைச்சேனையின் ஆரம்ப கால வரலாறு குறித்து ஒரு சில நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் வை.அகமதுவின் ‘வாழைச்சேனை வரலாறு’, திருமதி.சி.ப.தங்கத்துரை எழுதிய ‘ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வரலாறு’, தாழை செல்வநாயகம் எழுதிய ‘வாழைச்சேனையின் வரலாற்று விழுமியங்கள்’ போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 014883).