செ.செபமாலை (கலைஞர் குழந்தை). முருங்கன்: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(10), 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ.
இறைவனா புலவனா?, தமயந்தி, விடுதலைப் பயணம் (மோயீசன் வரலாறு) ஆகிய மூன்று வடமோடி நாட்டுக் கூத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இவை பல்வேறு காலகட்டங்களில் மேடையேற்றம் கண்டு பாராட்டுகளைப் பெற்றவை. கலைஞர் குழந்தை 1964 முதல் முத்தமிழ்க் கலாமன்றம் என்ற கலை அமைப்பை உருவாக்கி இயக்கிவருபவர். குழந்தை செபமாலை என அழைக்கப்படும் செபஸ்தியான் செபமாலை (பிறப்பு: மார்ச் 8, 1940) பிரபல்யமான ஈழத்து எழுத்தாளரும், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞருமாவார். ஆசிரியர், கவிஞர், நாடகாசிரியர், நெறியாளர், பாடகர், இசையமைப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர். மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் முருங்கனில் வசித்து வரும் செபஸ்தியான் செபமாலை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். அல்லைப்பிட்டி பாடசாலை ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து, 40 ஆண்டு சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது முதலாந்தர அதிபராக பதவி வகித்து வந்தார். இவர் ஒரு பாரம்பரியக் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரால் எழுதி, தயாரித்து மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பலவாகும். இலக்கியத்துறையில் ஈடுபாடு 1955 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. இவரது முதல் ஆக்கமான ‘அறப்போர் அறைகூவல்’ எனும் கவிதை இலங்கை வானொலியில் 1963 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. இலக்கியம், கலை, நாடகம், கவிதை என இலங்கை வானொலியிலும், தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இத்தகைய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகளில் ஒலிபரப்பாகியும், வெளியாகியுமுள்ளன. 1998ல் அரச இலக்கிய விழாவில் இவரது பரிசு பெற்ற நாடகங்கள் என்று நூலுக்குச் சாகித்திய விருது வழங்கப்பட்டது. 1999ல் கொழும்பில் கலாசாரத் திணைக்களத்தினால் கலாபூசண விருது வழங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் ஆளுநர் விருது வழங்கப்பட்டு பொன்னாடை போர்த்திப் பொற்கிழியும் வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு ‘நாடகக்கீர்த்தி’ விருது வழங்கியது.01.11.94ல் மன்னார் மாவட்டக் கலை பண்பாட்டுக்கழகம், இவருக்கு ‘முத்தமிழ் வேந்தர்’ என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. 02.09.2000 அன்று மன்னாரில் இடம்பெற்ற நாடக நிகழ்வில் ‘திருக்கள வேந்தன்’ விருது, 2005ல் மட்டக்களப்புப் பக்கலைக்கழக நுண்கலைத் துறையின் ‘தலைக்கோல்’ விருது என்பனவும் வழங்கப்பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54610).