தோழர் பாலன். சென்னை: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).
112 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 50., அளவு: 21×13 சமீ.
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆட்சியின்போது அவரால் 1990இல் உருவாக்கப்பட்டது சிறப்பு முகாம் என்ற சித்திரவதை முகாமாகும். 1990இல் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இச் சிறப்பு முகாம்கள், அப்பாவிகள் பலரின் வாழ்வுப் பாதையையே திசைமாற்றி விட்டதாக விபரிக்கிறார். சட்டத்திற்குப் புறம்பான வகையில் தமிழக சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் மறைக்கப்பட்ட உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் இந்நூலில் முன்வைத்துள்ளார். தமிழ் அகதிகளின் சிறப்பு முகாம் கொடுமைகள் குறித்து இந்திய ஆட்சியாளர்கள் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தன் மனக் குமுறலை வெளிப்படுத்துகின்றார். ஈழத்தவரான இந்நூலாசிரியர் 1991இல் சிறப்புமுகாமில் அடைத்துவைக்கப்பட்டு 30.4.1998இல் விடுதலையானவர். அதன் பின்னர் இன்றுவரை சிறப்புமுகாம் அகதிகளின் விடுதலைக்காகக் குரல்கொடுத்துவருகிறார். தான் சிறைவாசியாக இருந்த காலப்பகுதியில் தனக்கு ஏற்படுத்தப்பட்ட கொடுமைகளையும் தமிழக சிறப்பு முகாம்கள் பற்றிய முக்கியமான தகவல்களையும் உணர்வுபூர்வமாக முன்வைத்துள்ளார். சென்னை வழக்கறிஞர் பா.புகழேந்தியின் தலைமையில் இயங்கும் தமிழ்த்தேச மக்கள் கட்சியின் உத்தியோகபூர்வ இதழான ‘தமிழ்த்தேச விடுதலை அறம்’ என்ற பத்திரிகையில் அவர் எழுதிய தொடர் கட்டுரைகள் இன்று நூல்வடிவில் விரிந்த வாசகர் பரப்பைநாடி வெளிவந்துள்ளன. தோழர் பாலன் தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவருகிறார்.