14706 நினைவுப் பகடைகள் (சிறுகதைகள்).

நந்தவனம் சந்திரசேகரன் (தொகுப்பாசிரியர்). திருச்சி 620 003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண். 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (சென்னை: கெப்பிட்டல் இம்ப்ரஷன்). 136 பக்கம், விலை: இந்திய ரூபா 110., அளவு: 22×15 சமீ. தமிழகத்தில் புலம்பெயர்ந்து வாழ்ந்த வேளையில் மறைந்த ஈழத்துப் பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவா அவர்களின் நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் வெற்றியாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து அமரர் மகாதேவாவின் நினைவுநூலாக வெளியிட்டிருக்கிறார்கள். தலைப்புச் சிறுகதை “நினைவுப் பகடைகள்” கட்டிட வேலையாளான பத்திரியம்மாளின் உணர்வுகளுக்கு உயிரோட்டம் தந்துள்ளது. கதாசிரியர் பவித்ரா நந்தகுமார் சென்னை மொழி வழக்கில் இக்கதையை எழுதியுள்ளார். விதியின் சூதாட்டத்தில் ஏழ்மையின் பகடைக்காய் மனிதனே என்பதை குறிப்பால் உணர்த்தும் கதை இது. கமலவேலனின் “நாக்குறுதி”, குடும்பச் சூழ்நிலைகளின் யதார்த்தங்களை நடைமுறை வாழ்வியலில் பின்பற்றத் தவறும் சூழலொன்றை விபரிக்கின்றது. உமா கல்யாணியின் “வேற்றுமை இல்லை” என்ற கதை மத ஒருமைப்பாட்டை பள்ளிப் பருவத்திலேயே புகுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றது. வேலூர் நந்தகுமாரின் “உடைந்த மனக்கோட்டையும் திறந்த மனக்கதவும்” என்ற கதை வாழ்வியல் தத்துவத்தை அழகாக வெளிப்படுத்துகின்ற வசனநடையைக் கொண்டுள்ளது. பூதலூர் முத்துவின் “ஈரம்”- மனிதனை ஆளும் பணத்தின் சர்வாதிகாரம் பற்றிச் சொல்கின்றது. இராம இளங்கோவனின் “சூரியச் சிறகுகள்”, பெண்ணியம் போற்றும் எழுத்தாக்கமாகும். பெண்கள் சந்திக்கும் அன்றாடக் கொடுமைகளயும் அவர்களின் மனத்தாக்கங்களையும் இக்கதை பதிவுசெய்கின்றது. ஆர்.கே.சண்முகத்தின் “குட்டை மனிதர்கள்”, எஸ்.செல்வசுந்தரியின் “பிராயச்சித்தம்”, எம்.பெனட் ஜெயசிங் எழுதிய “ஜன்னலைத்திற”, தங்க ஆரோக்கிய தாசனின் “மாரி”, அகரம் செ.தர்மலிங்கம் எழுதிய “மெல்லத் திறந்தது மனசு”, எஸ்.ஜே.ஜெயக்குமார் எழுதிய “போரே நீ போ”, மாணிக்கம் பஞ்சலோரஞ்சன் எழுதிய “உருமாறும் உள்வட்டங்களும் உறுதியான நேர்கோடுகளும்” ஆகிய கதைகளும் மனித வாழ்வின் பல்வேறு சமூகப் பிரச்சினைகளைப் பேசுகின்றன. எஸ்.ஜே.ஜெயக்குமார். மாணிக்கம் பஞ்சலோரஞ்சன் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். மற்றையோர் தமிழக எழுத்தாளர்களாவர்.

ஏனைய பதிவுகள்