எம். வாமதேவன். ஹட்டன்: பாக்யா பதிப்பகம், 4v, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (ஹட்டன்: பாக்யா பதிப்பகம்).
xxviii, 183 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-1805-08-1.
நுவரெலிய மாவட்டத்தின் கொட்டகலைப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.வாமதேவன், நிதி திட்டமிடல் அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும், வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றியவர். 1960க்குப் பின்னர் தொடங்கி, 2014 வரையிலுமான காலகட்டத்தின் அனுபவங்களை இந்நூலில் கட்டுரைகளாக்கியுள்ளார். இதிலுள்ள 21 கட்டுரைகளும் கால ஒழுங்கில் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் 10 கட்டுரைகளும் மலையகத்து அரசியல், பொருளியல், அபிவிருத்தி மற்றும் சமூக வாழ்வு பற்றியதான விடயங்களைப் பேசுகின்றன. பொருளியல் அணுகுமுறையிலான அபிவிருத்திசார் ஆய்வுக்கட்டுரைகளாக இவை காணப்படுகின்றன. மலையகத் தமிழர் என்னதான் அரசியல் உரிமைகளை வென்றெடுத்தாலும், அது அபிவிருத்தியை சமத்துவமாக அனுபவிக்கும் ஒரு தன்னிறைவு சமூகமாகத் தன்மை வளர்த்துக்கொண்டாலேயன்றி மலையகத்தை பூரண சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கருத முடியாது என்ற கருத்து நூலின் முன்னைய 10 கட்டுரைகளிலும் பொதிந்துள்ளது. புரட்சிகரமான சமூகப் பொருளாதார அரசியலமைப்பின் மூலமே இது சாத்தியப்படும் என்று இந்நூல் வலியுறுத்துகின்றது. எஞ்சிய 11 கட்டுரைகளும் மலையக இலக்கியம் பற்றிப் பேசுகின்றன. அமரர் இர சிவலிங்கம் அவர்களது வாழ்க்கையோட்டம், மலையக மக்கள் நெஞ்சங்களில் மறையாதிருக்கும் ஆசான் திருச்செந்தூரன், என்.எஸ்.எம். இராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து- மறுபிரசுரத்துக்கான அணிந்துரை, மலரன்பனின் பிள்ளையார் சுழி சிறுகதைக்கான அணிந்துரை, லெனின் மதிவானத்தின் ஊற்றுகளும் ஓட்டங்களும் கட்டுரைத் தொகுதிக்கான அணிந்துரை, ஏ.கணபதிப்பிள்ளையின் தேயிலைக் காவியம்- மதிப்பீட்டுரை, தமிழ் மகனின் வனசாட்சி- தமிழகப் பார்வையில் ஒரு மலையக நாவல், மலையகப் படைப்புகள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும்-ஒரு மேலோட்டம், மு.சிவலிங்கத்தின் வெந்து தணிந்தது காலம்-சமகால சமூக, அரசியல் விமர்சன படைப்புகளின் தொகுப்பு, வாழ்வியல் ஓவியங்களாகும் தெளிவத்தை ஜோசப் கதைகள், சடகோபனின் கண்டிச் சீமையிலே மலையக இலக்கியப் பரப்பில் ஒரு புதிய பரிமாணம் ஆகிய 11 இலக்கியக் கட்டுரைகள் இந்நூலின் பிற்பகுதியை அலங்கரிக்கின்றன.