ந. சிவநாதன். சென்னை 600017: இரத்தினம் பதிப்பகம், 11-2 இராமசாமித் தெரு, தி.நகர், 1வது பதிப்பு, 2012. (சென்னை 33: ஜெயபாலு பிரிண்டர்ஸ், எண் 115, கோடம்பாக்கம் ரோடு, மேட்டுப்பாளையம்).
368 பக்கம், விலை: இந்திய ரூபா 275., அளவு: 21.5×14.5 சமீ.
இதிகாச புராண காலச் சம்பவங்களை வைத்து புலவர் சிவநாதனால் எழுதப்பட்ட ஏழு நாட்டிய நாடகப் பிரதிகளின் தொகுப்பு இது. மகாபாரதத்தில் திரௌபதையின் கதை பாஞ்சாலி சபதம் என்ற பெயரிலும், பீஷ்மரின் வரலாறு நதிமகன் என்ற பெயரிலும், குசேலர்-கிருஷ்ணரின் அன்புகொள் நட்பு எங்கிருந்தோ வந்தான் என்ற தலைப்பிலும், சகுந்தலை – துஷ்யந்தன் வரலாற்றை எடுத்துக்கூறும் காவியத்தை குருமகளும் கோமகனும் என்ற தலைப்பிலும், அம்பிகாபதி-அமராவதி காதலை கவிமகனும் கோமகளும் என்ற தலைப்பிலும் கண்ணகி நீதி கேட்கும் வரலாற்றை சிலம்புத் தீ என்ற பெயரிலும், சத்தியம் தவறாத அரிச்சந்திரனின் வரலாற்றைச் சத்திய ஆரம் என்ற பெயருடனும் நாட்டிய நாடகப் பிரதிகளாக எழுதியுள்ளார். கதைகளுக்குரிய இலக்கியக் கருவைத் தேர்ந்தெடுத்து அதற்கு நாடக வடிவம் கொடுத்து காட்சி அமைப்புகளை உருவாக்கியிருக்கும் முறை அவரது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகின்றது. எளிமையான கவிநடை, சந்தம் மற்றும் அளபெடைக்கான சொல்வளம், எதுகை, மோனை என்பவற்றை பொருத்தமாகவும் அழகாகவும் கையாண்டுள்ளார்.