12086 – வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம்: ஆலயச் சிறப்பும் வரலாறும்.

குமார் வடிவேலு. கொழும்பு 6: வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், மயூரா பிளேஸ், 1வது பதிப்பு, ஆண்டு விபரம், அச்சக விபரம் தரப்படவில்லை.

iv, 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12×10.5 சமீ.

கொழும்பு, வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான ஆலயத்தின் சிறப்பும் வரலாறும் சுருக்கமாக இச்சிறு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கோயிலின் பரிபாலகர் பொன்.வல்லிபுரம் அவர்கள், அப்போதைய பரிபாலன சபையினருடன் இணைந்து 1987 ஆம் ஆண்டில் அம்மனுக்கு அரச மரச்சாரலில் கோயில் அமைத்தார். தென்னிந்தியாவில் இருந்து பத்திரகாளி அம்பாளின் சிலையை வரவழைத்து, 1987 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் உத்தராட நட்சத்திர நாளில் ஆலயம் அமைத்து மருதானை கப்பித்தாவத்தை பாலசெல்வ விநாயகர் ஆலய குருக்கள் பா.சண்முகரத்தினக் குருக்களின் மேற்பார்வையில் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்று இவ்வாலயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வருகிறது. இவ்வாலயத்தில் நடைபெறுகின்ற ஆடிப்பூர இலட்சார்ச்சனை, தேர் உற்சவம், இந்து சமுத்திரத் தீர்த்த உற்சவம், நவராத்திரி விழா ஆகியவை யாவும் சிறப்புக் காட்சியாகும். அது மட்டுமன்றிச் சமயத்தை வளர்க்கும் பணிகளான அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்பு, சமய சம்பந்தமான சொற்பொழிவுகள் என்பனவும் மிகவும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. மேலும் இவ்வாலயத்தில் அருங்கலை மண்டபம், தியான மண்டபம் மற்றும் சுப்பம்மாள் கல்யாண மண்டபம் என்பன கட்டப்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20706).

ஏனைய பதிவுகள்