12785 – நா.சுந்தரலிங்கத்தின் விழிப்பு (நாடகம்).

நா.சுந்தரலிங்கம் (மூலம்), அம்மன்கிளி முருகதாஸ், கயிலைநாதன் திலகநாதன் (பதிப்பாசிரியர்கள்). வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2007. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½, டாம் வீதி).

75 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21 x 14.5 சமீ.

க.பொ.த. சாதாரண தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்திற்கு அமரர் நா.சுந்தரலிங்கத்தின் ‘விழிப்பு’ ஒரு பாடமாக ஆக்கப்பட்டுள்ளது. சிவானந்தன், சுஹைர் ஹமீட், முருகையன், ம.சண்முகலிங்கம் போன்றோருடன் நா.சுந்தரலிங்கம் சேர்ந்து ஒரு காலகட்டத்தில் நாடகங்களை இயக்கியிருந்தார். நாடறிந்த நடிகர், நெறியாளர், நாடக எழுத்தாளர் எனப் பெயரெடுத்த அவர் ‘அபசுரம்’ என்ற அபத்த நாடகத்தையும் எழுதியிருக்கிறார். அவரது ‘விழிப்பு’ என்ற நாடகம் சமூகத்தில் காணப்பட்ட வேலையில்லாப் பிரச்சினையைப் பேசிய நாடகமாகும். 1969இல் எழுதப்பட்ட இந்நாடகம், கூத்தாடிகள் அமைப்பினரினால் முதல் மேடையேற்றத்தை கொழும்பு, ஹவ்லொக் நகர், லும்பினி கலையரங்கில் 21.11.1975இல் கண்டது. வேலையில்லாப் பட்டதாரியான சந்திரன், அரசாங்க உயர் அதிகாரியான அவனது தந்தை கார்த்திகேசு, சந்திரனின் பெரிய தகப்பன் சிவக்கொழுந்து, வசதியான குடும்பத்தில் பிறந்த சந்திரனின் மனைவி செல்வி, சந்திரனின் மாமன் சிற்றம்பலம் ஆகியோரை பிரதான பாத்திரங்களாகக் கொண்டு நாடகம் நகர்த்தப்படுகின்றது. இந்நாடகத்திற்கான பாடல்களை கவிஞர் இ. முருகையன் எழுதியிருந்தார். இந்நாடகம், க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கு இலங்கைத் தமிழ் நாடக வரலாற்றின் ஒரு காலகட்டத்து நாடகங்களின் பதச்சோறாக விளங்குகின்றது.

ஏனைய பதிவுகள்