மகேந்திரன் கேதீஸ்வரன். மட்டக்களப்பு: நாகசக்தி கலை மன்றம், முனைக்காடு, 1வது பதிப்பு, 2017. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம்).
72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14.5சமீ., ISBN: 978-955-3887-00-9.
கூத்து, நந்தியின் மகிமை, மனிசி எங்கே?, உழவர் பெருமை, மதுவின் கொடுமை, அண்ணாவியமார் வாண்மை விருத்தி, ஆட்டமுறையும் தாளங்கட்டுதலும், கூத்தியலில் பயன்படுத்திய ஆங்கில மொழிச்சொற்கள் ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இளம் கலைஞர் விருது பெற்ற அண்ணாவியார் மகேந்திரன் கேதீஸ்வரன், தான் தயாரித்த “நந்தியின் மகிமை”, “மனிசி எங்கே?”, “உழவர் பெருமை”, “மதுவின் கொடுமை” ஆகிய நான்கு வடமோடிக் கூத்துருக்களையும் இந்நூலில் இடம்பெறச் செய்துள்ளார். “நந்தியின் மகிமை”யில் இசை நிறைவும், இயல்நிலையும் ஒருங்கே கூட, கூத்து மரபு தரும் செய்யுள் அமைப்பும் கூத்தினை பழமையாகவே மரபு மாறாமல் பேணும் சிறப்பும் காணமுடிகின்றது. “மனிசி எங்கே?” என்ற வடமோடிக் கூத்துப் பிரதியானது கூத்துக் கலையைப் பயில்வோர்க்கும், கூத்துப் பிரதிகளை எழுத முயல்வோருக்கும் ஒரு சிறிய சம்பவத்தை எப்படி கூத்தாக்கம் செய்வதென்பதை போதிக்கின்றது. ‘உழவர் பெருமை” என்ற கூத்துருவில் கட்டியன் தருவில் புத்தாக்கமானதும் முறை மாறாத பாடலாகவும் அமைந்து அதன் எதுகை மோனைகளும் கட்டுறுப்பான சொற்கோப்பும் உள்ளத்தில் உவகையை ஏற்படுத்துகின்றது. “மதுவின் கொடுமை” என்ற இறுதிக் கூத்தில், குடி குடியைக் கெடக்கும் கொடுமையுடையது என்ற அறிவுரையை தாய், தந்தை, மகன் பாத்திர வார்ப்புகளினூடாக வெளிக்காட்டுகிறார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 76608).