M.C. ரஸ்மின். ராஜகிரிய: Sri Lanka Development Journalist Forum 3/8 ஸ்வர்ணா பிளேஸ், நாவல வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, புகையிரத நிலைய வீதி).
xxiv, 220 பக்கம், விலை: ரூபா 480.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-54637-1-3.
ஈழத்தின் யுத்தம் தமிழ் இலக்கியங்களில் தாக்கம் செலுத்தியிருக்கும் அளவுக்கு சிங்கள இலக்கியங்களில் தாக்கம் செலுத்தியுள்ளதா என்ற கேள்விக்கு இவ்வாய்வு பதிலளிக்கின்றது. சிங்களத்தில் வெளிவந்த கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் பாடல்கள் போன்றன தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதுடன் ஏனைய இலக்கிய வடிவங்களைவிட இசைப்பாடல்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதைக் காட்டுகின்றார். யுத்தம் தொடர்பில் சிங்களப் படைப்பாளிகள் சிங்கள மக்களுக்கு எவ்வாறானதொரு செய்தியை வழங்கியிருக்கிறார்கள் என்பதற்கு இந்நூல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது. 1983 முதல் 2007வரையான 25 வருடகால சிங்களப் படைப்பிலக்கியங்களை அடிப்படையாக வைத்து இந்நூலை ஆசிரியர் ஆய்வுசெய்துள்ளார். தமிழ் இலக்கியத்தில் தோன்றிய போர்க்கால இலக்கியங்கள் போன்று சிங்கள இலக்கியத்திலும் போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளனவா? அவ்வாறு தோன்றியிருப்பின் அவற்றின் இடம் எத்தகையது? சிங்கள எழுத்தாளர்கள் இன நல்லுறவுக்குக் குரல் கொடுத்தார்களா? அல்லது பேரினவாதத்திற்குத் துணைநின்றார்களா? இதில் விகிதாசாரம் எத்தகையது என்பன போன்ற வினாக்களுக்கு இந்நூல் விடைதருகின்றது. ஆ.ஊ. ரஸ்மின், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையில் விஷேட பட்டம் பெற்றவர். 2007இல் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. போர்க்கால சிங்கள இலக்கியம்-பின்புலம், சிங்கள-தமிழ் இலக்கிய உறவு, சிங்களப் பாடல் இலக்கியம்-அறிமுகம், சிங்களப் பாடல் இலக்கியம்-இரண்டாவது வாசிப்பு, போர்க்கால சிங்களக் கவிதைகள், போர்க்கால சிங்களச் சிறுகதைகள், இனவுறவுக் கருத்து நிலையும் சிங்கள நாவல்களும், எதிர்நிலைக் கருத்தாக்கங்கள், முடிவுரை ஆகிய ஒன்பது இயல்களில் இவ்வாய்வு விரிந்துள்ளது.