இணுவையூர் மயூரன். தமிழ்நாடு: அகநாழிகை, 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 250., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-84921-37-8.
கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடியே கவிதைகளும் ஊற்றெடுத்து வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் எனும் இக்கவிதைத் தொகுப்பு. மயூரன் எழுதிய நாற்பது கவிதைகளும் அவரின் தாய்மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்ந்ததால் தான் இழந்த வாழ்வையும், புலம்பெயர்வால் தான் அனுபவித்த அடையாளமின்மையின் சோகத்தையும் புலப்படுத்துகின்றன. கவிஞர் மயூரனின் தமிழ்ப்பற்றை அவரது கவிதைகள் மட்டுமல்லாது, பக்கங்கள் தோறும் தேர்ந்து இணைத்துள்ள புகைப்படங்களும் பறை சாற்றி நிற்கின்றன. அவரது தாய்மண் மீதான நேசமே அவரது படைப்புக்களின் ஊற்றுக்கண் என்றபோதிலும், தன்னை அரவணைத்த சுவிட்சர்லாந்து தேசத்தின்மேல் கொண்ட காதலையும் இக்கவிதைகளில் கண்டுணர முடிகின்றது. இயற்கையின் படைப்பில் எழுந்திட்ட ஊசியிலைக் காடுகளும் மலைகளுமாக இவரின் கவிதைகளுக்குத் தீனிபோடுகின்றன. முன்னட்டையில் பனிமலையின் பின்னணியில் இவ்வூசியிலைக் காடுகளின் கீழ் காணும் நீர்நிலையில் அவற்றின் விம்பங்கள் பனங்கூடலாகத் தோற்றமளிப்பதின் மூலம், இவரது வாழ்வின் ஒரு பக்கம் போரியல் வாழ்வின் துயரங்களும் இன்னொரு பக்கம் சுவிஸ் மண்ணின் இயற்கையும் இணைந்த அவரது வாழ்வியல் தரிசனங்களையே இக்கவிதைத் தொகுதி உள்ளடக்குகின்றதென்பதை பூடகமாகச் சொல்கின்றது.