15531 கொரோனாக் கவிதைகள்.

க.பரணீதரன், இ.சு.முரளிதரன், பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

(4), 36 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 17×12 சமீ., ISBN: 978-955-0958-46-7.

கொரோனா வைரஸ் தொற்று (கோவிட் 19), சீனாவில் ஆரம்பித்து மீவிசையுடன் உலகெங்கும் பரவி பல லட்சக் கணக்கான மனித உயிர்களைக் காவு கொண்டு வருகின்றது. உலகின் பலம் மிக்க நாடுகள் கூட இந்த நுண்ணுயிரியின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாது திணறுகின்றன. நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் கொள்ளை, கோதாரி நோய்கள் பாரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருந்தன. போதிய ஆவணப்படுத்தலின்றி, இவை பற்றிய தகவல்களை இன்றைய தலைமுறையினர் பெறமுடியாதுள்ளது. அவ்வாறன்றி தற்போதைய கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை எதிர்கால சந்ததி இலகுவாக அறிந்துகொள்ள வேண்டும். அதையும் நயம் மிக்க இலக்கிய வடிவமொன்றினூடாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜீவநதி சஞ்சிகை கவிதைப் போட்டி ஒன்றினை நடத்தி தெரிவுசெய்யப்பட்ட சிறந்த கவிதைகளை ‘கொரோனாக் கவிதைகள்’ என்ற தொகுதியாக வெளியிட்டுள்ளனர். இத்தொகுதியில் ஜமீல், மீரா சிவகாமி, சு.க.சிந்துதாசன், கரு.மாணிக்கம், தே.பிரியன், தெட்சணாமூர்த்தி கரிதரன், ஜமால்தீன் வஹாப்தீன், சு.ராஜசெல்வி, விதுர்சனா ஸ்ரீரஞ்சன், ராணி சீதரன், சப்னா இக்பால், ஹ.பிரசாந்தன், ரோஷான் ஏ.ஜிப்ரி, எஸ். திலகவதி, வெ.அருட்குமரன், மயிலையூர் மோகன், ஸ்ரீஸ்கந்தராஜா ஷேயந்தன், சிவனு மனோகரன் ஆகியோரின் கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நூல் 155ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்