தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது பிரதான சாலை, வேளச்சேரி, 1வது பதிப்பு, நவம்பர் 2020. (சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ்).
102 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ.
‘கவிதை எனது ஆயுதம்’ என்ற கவிதையில் தொடங்கி, ‘காணாமல் போன பூனைக்குட்டி’ என்ற கவிதை ஈறாக தீபச்செல்வனின் தேர்ந்த 59 கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் இரத்தினபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியின் பழைய மாணவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சிறப்புப் பட்டதாரியான இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். திருநெல்வேலி (தமிழ்நாடு) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்பை(M.Phil) நிறைவுசெய்துள்ளார். அதிகம் பேசப்பட்ட ‘நடுகல்’ நாவலை எழுதியவர். ஈழப்போராட்டத்தின் வலிமை மிகுந்த குரலாக இவரது கவிதைகளும் கதைகளும் அமைந்துள்ளன. ஈழப்போரின் நான்காம் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்ட பல கவிதைகளை இவர் எழுதியிருக்கிறார். ஈழநிலத்தின் போருக்குப் பின்னரான வாழ்வையும் இவரது கவிதைகள் பேசுகின்றன. ‘நான் ஸ்ரீலங்கன் இல்லை’ என்ற கவிதைத் தொகுதி உலகத் தமிழர்களை மாத்திரமல்ல, உலகின் ஒடுக்கப்பட்ட பல்வேறு சமூகத்தவர்களையும் ஈர்த்த கவிதைகளைக் கொண்டது. இவரது கவிதைகள் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களினதும் குரலாக ஓங்கி ஒலிப்பதால் ஆங்கிலம், சிங்களம், பிரெஞ்சு, தெலுங்கு, பாரசீகம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.