பைந்தமிழ்க் குமரன் (இயற்பெயர்: ஜெ.டேவிட்). கல்முனை: பைந்தமிழ்க் குமரன் டேவிட், பிள்ளையார் கோவில் வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, 2017. (கல்முனை: கோல்டன் பதிப்பகம், இல. 105 V, மட்டுநகர் வீதி).
xi, 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-38200-0-6.
கிழக்கு மாகாணத்தின் பழந்தமிழ் கிராமமான சொறிக்கல் முனையை சேர்ந்தவர் ஜெ.டேவிட். கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரி, பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, பேராதனை பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயின்று ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, பின்னாளில் நாவலர் வித்தியாலய அதிபராக எனப் பணியாற்றி இருபத்தெட்டு வருடங்களுக்கு மேலாக கல்விப் புலத்தில் அனுபவம் கொண்டவர். தன் அகக்கண் வடித்த கண்ணீரை மையமாக்கி அவர் எழுதிய கவிதைகளே மண்மாதா மடியில் தவழ்கின்றன. மரபுநிலையைத் தவிர்த்து தனித்துவமான நவீன கவிதைப் பாய்ச்சலை மண்மாதாவில் அனுபவிக்க முடிகின்றது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகத் தாண்டவமாடிய கொடிய யுத்தத்தின் அனுபவங்கள் ரணங்களாகி நரக வேதனையைக் கொடுக்க அவற்றை ஆற்றிக்கொள்ள பேனா என்ற ஆயுதத்தை தூக்கியவர் இக்கவிஞர் என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. லப்டப் அதிர்வுகள், கேட்கிறதா?, வரம், மண்மாதா,செட்டை மறிந்த வெண்புறா, எம் பிதாவே, பெண்கள், கருந்தேள், சுப்பனுக்கும் சோமனுக்கும் என இன்னொரன்ன 50 கவிதைகளை இந்நூலில் தேர்வுசெய்து உள்ளடக்கியிருக்கின்றார்.