முஹம்மத் சித்தீக் (மூலம்), மௌலவி முஹம்மத் ரஸீன் (மொழிபெயர்ப்பு). குருநாகல்: தாருல் குர்ஆன் பப்ளிஷர்ஸ், இல. 100, கண்டி வீதி, மல்லவபிட்டிய, 1வது பதிப்பு, 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
iv, 20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 180., அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-43511-0-3.
6-12 வயதுக்கிடைப்பட்டோருக்கான சிறுவர் நூல். அரபு மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது. இஸ்லாமிய வரலாற்று நிகழ்வொன்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூல். சாபிர் என்பவர் ஓர் ஏழை. தன் குடும்பம் வசிக்கவென வீடொன்றை விலைக்குப்பெற அலீ என்பவரைச் சந்திக்கிறார். வீட்டை வாங்கிய பின்னர் அங்கிருந்து பழைய தங்கக் குடமொன்றினைக் கண்டெடுக்கிறார். அதன் உரிமையாளர் முன்னைய வீட்டு உரிமையாளரே எனக்கருதி அவரிடம் அதனை ஒப்படைக்கச் செல்கிறார். அலி அதனை ஏற்க மறுத்ததால் உள்ளூர் தலைவரிடம் நீதி கேட்கச் செல்கின்றனர். தலைவரின் தீர்ப்பு வித்தியாசமாக அமைந்திருப்பதுதான் கதையின் கரு. நிதியும் நேர்மையும் தான் இறுதியில் வெல்லும் என்ற கருத்தை சிறுவர்களிடையே வலியுறுத்தும் நூல் இது. குருணாகல் மாவட்டத்தில் மல்லவபிட்டிய என்ற ஊரில் பிறந்த மௌலவி முஹம்மத் ரஸீன் தன் ஆரம்பக் கல்வியை குருணாகல ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார். தாருல் உலூம் ஹாஷிமிய்யஹ் அரபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைக் கற்று, இந்தியாவில் தமிழ்நாடு ஜாமிஆஅல் உஸ்வதுல் ஹஸனா அரபுக் கல்லூரியில் மௌலவி பட்டத்தைப் பெற்றுக்கொண்டவர். இதுவரை தமிழில் 57 நூல்களையும் சிங்கள மொழியில் 12 நூல்களையும் ஆங்கிலத்தில் ஒரு நூலையும் எழுதியுள்ளார். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27075).